வாரணம் ஆயிரம் படம் மூலமாகத் தமிழில் கவனம் பெற்ற சமீரா ரெட்டிக்கு 2014-ல் திருமணம் நடைபெற்றது. அடுத்த வருடம் அவருக்கு மகன் பிறந்தான். இப்போது இன்னும் சில மாதங்களில் சமீராவுக்கு 2-வது குழந்தை பிறக்கவுள்ளது.
இந்நிலையில் அவர் தனது புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டபோது அவரைச் சிலர் உருவக்கேலி செய்தார்கள். இதற்கு சமீரா ரெட்டி பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது:
என்னைக் கேலி செய்பவர்களிடம் ஒரே ஒரு கேள்வியைக் கேட்கிறேன்? நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்? நீங்கள் உங்கள் அம்மாவின் வழியாகத்தான் இந்த உலகுக்கு வந்தீர்கள். நீங்கள் பிறந்தபோதே உங்கள் தாய் கவர்ச்சியாக இருந்தாரா? தாய்மை என்பது இயற்கையான நடைமுறை. மிகவும் அழகானது. முதல் குழந்தை பிறந்தபோது எடையைக் குறைக்க எனக்குச் சில காலம் தேவைப்பட்டது. அதேபோல 2-வது குழந்தை பிறந்த பிறகும் எடையைக் குறைக்க சில காலம் ஆகும்.
கரீனா கபூர் போல சிலர் குழந்தை பிறந்தவுடன் அம்சமாகக் காட்சியளிப்பார்கள். என்னைப் போன்றவர்களுக்குப் பழைய எடை, உருவம் கிடைக்க சில காலம் ஆகும் என்று கூறியுள்ளார்.