சென்னை: சென்னையில் சனிக்கிழமையன்று நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் நடிகை நயன்தாராவை ராதாரவி தரக்குறைவாகப் பேசிய விடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று புகழப்படுபவர் நடிகை நயன்தாரா. பல்வேறு விதமான கதாபாத்திரங்களையும் ஏற்று திறம்பட நடித்து வருகிறார்.
இவர் இப்போது கமல்ஹாசனின் 'உன்னைப்போல் ஒருவன்' மற்றும அஜித்தின் 'பில்லா - 2' ஆகிய படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கத்தில் ”கொலையுதிர் காலம்” என்ற திகில் படத்தில் நடித்துள்ளார். அவருடன் இந்தப் படத்தில் பிரதாப் போத்தன், பூமிகா, ரோகிணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா சனிக்கிழமை சென்னையில் நடைபெற்றது.
படத்தின் இயக்குநரே இவ்விழாவில் கலந்து கொள்ளவில்லை. இயக்குநர் கரு.பழனியப்பன், ராதாரவி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட சில திரையுலகினர் மட்டுமே கலந்து கொண்டார்கள்.இந்த விழாவில் ராதாரவி பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார். குறிப்பாக நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசியுள்ளதாவது:
நயன்தாரா நல்ல நடிகை, இவ்வளவு நாள் திரையுலகில் ஒரு பெண் நின்று நிலைப்பதே பெரிய விஷயம். அவரைப் பற்றி மீடியால வராத செய்தியே கிடையாது. அதையெல்லாம் தாண்டிதான் பீல்டுல நிக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் எப்போதுமே ஒரு விஷயத்தை நாலு நாட்கள் மட்டுமே ஞாபகம் வைத்திருப்பார்கள். பிறகு விட்டுவிடுவார்கள்.
நயன்தாராவை பார்த்தீங்கண்னா ஒரு படத்தில் பேயாக நடிக்கிறார். இன்னொரு பக்கம் சீதாவாகவும் நடிக்கிறார். முன்னாடி எல்லாம் சாமி கேரக்டரில் நடிக்க வேண்டும் என்றால் கே.ஆர்.விஜயாவைத் தான் தேடுவார்கள். இப்பெல்லாம் போது சீதாவாக யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம், பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம்.
இவ்வாறு ராதாரவி பேசியுள்ளார்.
இந்த வீடியோ பதிவு ட்விட்டரில் வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது. நயன்தாராவின் காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவன், பாடகி சின்மயி உள்ளிட்ட பலரும் ராதாரவியைக் கண்டித்து வருகிறார்கள்.
அதேநேரம் இது தொடர்பாக ஏன் நடிகர் சங்கம் இன்னும் மவுனமாக இருக்கிறது என்றும் ஆக்ரோஷமாக குரல் எழுப்பி வருகிறார்கள்.