ராதாரவிக்கு யாரும் வாய்ப்பு தரவேண்டாம்: பிரபல படத்தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை

நம் பெண்களுக்கு நாம் ஆதரவு அளிக்காவிட்டால் வேறு யார் செய்வார்கள் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது...
ராதாரவிக்கு யாரும் வாய்ப்பு தரவேண்டாம்: பிரபல படத்தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை

நயன்தாரா இரு வேடங்களில் நடித்துள்ள ஐரா படம் மார்ச் 28 அன்று வெளியாகவுள்ளது. சர்ஜுன் கேஎம் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பவானி, யமுனா என இரு வேடங்களில் நடித்துள்ளார் நயன்தாரா. கலையரசன், யோகி பாபு, ஜெயபிரகாஷ் போன்றோரும் நடித்துள்ளார்கள். இசை - கே.எஸ். சுந்தரமூர்த்தி. இப்படத்தை கேஜேஆர் நிறுவனம் தயாரித்துள்ளது. 

இந்நிலையில் நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட மூத்த நடிகர் ராதாரவி, நயன்தாரா குறித்து அநாகரிகமாகப் பேசியதால் சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில் ஐரா படத்தைத் தயாரித்துள்ள கேஜேஆர் பட நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ஒரு மதிப்புமிக்க நடிகர், ஒரு படத்தில் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் அப்பட நடிகையை அவமானப்படுத்தும் விதத்தில் பேசியுள்ளார். பார்வையாளர்கள் அப்பேச்சை ரசித்துள்ளார்கள். ஒரு மூத்த நடிகருக்கு மரியாதை தரும் விதமாக நாம் இந்தளவுக்குக் கீழிறங்கிப் போயிருக்கிறோம். நயன்தாரா குறித்தும் பொள்ளாச்சி சம்பவம் குறித்தும் ராதாரவி பேசியது சரியல்ல. இப்போதுதாவது அவருக்கு எதிராக நாம் குரல் எழுப்பவேண்டும். இதனால் மாற்றம் ஏற்படுமா? அதைப் பற்றிக் கவலை வேண்டாம். குரல் கொடுங்கள். சரியான நபர்களுக்குக் கேட்கும்வரை குரல் கொடுங்கள். நடிகர் சங்கம் இதைக் கவனிக்கும் என எண்ணுகிறோம். ராதாவிக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு, எங்களுடைய படங்களில் அவரை ஒப்பந்தம் செய்யமாட்டோம் என்று கூறிக்கொள்கிறோம். மேலும் திரைத்துறையில் உள்ள எங்களுடைய நண்பர்களும் அவரை எந்தப் படத்துக்கும் ஒப்பந்தம் செய்யவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். நம் பெண்களுக்கு நாம் ஆதரவு அளிக்காவிட்டால் வேறு யார் செய்வார்கள் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com