அண்மைகாலமாகச் சமூகவலைத்தளங்களில் மீ டூ எனும் தலைப்பில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களையும், கொடுமைகளையும் பகிர்ந்து வருவது பரவலாகக் கவனத்தைப் பெற்று வருகிறது. குறிப்பாக, சில முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட மூத்த நடிகர் ராதாரவி, நயன்தாரா குறித்து அநாகரிகமாகப் பேசியதால் சர்ச்சை எழுந்துள்ளது. ராதாரவியின் சர்ச்சைப் பேச்சுக்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மீ டு இயக்கம் குறித்த திரைத்துறையினரின் மெளனம் தன்னை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. நீங்கள் பாதித்தால் மட்டுமே அது குறித்துப் பேசுவீர்கள் என்றால், இது துணிச்சலான செயல் அல்ல என்று நடிகர் சித்தார்த் சமீபத்தில் ட்வீட் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இது நயன்தாராவைக் குறிக்கும் விதமாக இருப்பதால் இதற்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் பதில் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பெண்களின் பாதுகாப்புக்கும் அவர்களுடைய நலனுக்காகவும் எப்போதும் துணை நிற்பவர் நயன்தாரா. அவர் பணியாற்றும் படங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழல் அமைய ஆதரவாக உள்ளவர். பெண்கள் பலருக்குப் பக்கபலமாகவும் பண ரீதியிலான உதவியையும் அளித்தவர். அவருடைய படங்களில் மீ டூ பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு வாய்ப்பளித்துள்ளார். ஆனால் இவற்றைச் சமூகவலைத்தளங்களில் சில காரணங்களுக்காக அவர் வெளிப்படுத்திக்கொள்ளவில்லை.
ஒரு பெண் மீதான மோசமான கருத்து குறித்துப் பேசும்போது அதைப் பற்றிப் பேசாமல் சிறிய குற்றச்சாட்டுகளை அவர்கள் சுமத்துகிறார்கள். ஒருவர் சமூகவலைத்தளங்களில் அமைதியாக இருப்பதற்காகத் தாக்கப்படுவது வேதனைக்குரியது என்று கூறியுள்ளார்.