தவறான செய்தியை வெளியிட்டதற்காக நடிகை திவ்யா ஸ்பந்தனாவுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க பெங்களூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2013 ஐபிஎல் போட்டியில் நடிகை திவ்யா ஸ்பந்தனாவுக்குச் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக ஏசியாநெட் நியூஸ் மற்றும் அதன் கன்னடத் தொலைக்காட்சியான சுவர்ணா நியூஸ் 24*7 ஆகிய தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டன. இதற்கு எதிராக பெங்களூர் மாவட்ட நீதிமன்றத்தில் திவ்யா ஸ்பந்தனா வழக்கு தொடர்ந்தார்.
2013-ம் ஆண்டு கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் நான் ஈடுபட்டிருந்தேன். அப்போது எனக்கும் ஐபிஎல்-லுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. தவறான செய்தி வெளியிட்டதற்காக ரூ. 10 கோடி இழப்பீடு வழங்கவேண்டும் என்று தனது மனுவில் திவ்யா ஸ்பந்தனா குறிப்பிட்டார். இதற்குப் பதிலளித்த இரு தொலைக்காட்சி நிறுவனங்களும், ஐபிஎல் சூதாட்டம் தொடர்பான செய்தியில் திவ்யா ஸ்பந்தனா குறித்து எந்த வகையிலும் நேரடியாகக் குறிப்பிடவில்லை என்று கூறின.
விசாரணைக்குப் பிறகு இன்று அளிக்கப்பட்ட தீர்ப்பில், திவ்யா ஸ்பந்தனா சூதாட்டத்தில் ஈடுபட்டார் என்பதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை. ஊடகங்கள் இதழியல் நெறிகளை மீறிவிட்டன. அவருடைய புகழுக்குக் களங்கம் விளைவித்துள்ளன. இரு தொலைக்காட்சி நிறுவனங்களும் நடிகை திவ்யா ஸ்பந்தனாவுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.