வெங்கட் மோகனின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் - அயோக்யா.
2015-ல் வெளியான டெம்பர் படத்தின் ரீமேக் தான் அயோக்யா. இந்தப் படம் ஹிந்தி ரீமேக் ஆக, சிம்பா என்கிற பெயரில் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் கடந்த வருடம் வெளியாகி அதிக வசூலை அடைந்தது.
அயோக்யா படத்தைத் தெலுங்குத் தயாரிப்பாளரான மது தயாரித்துள்ளார். இந்தப் படம் ரூ. 37 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் ஹிந்தி டப்பிங் உரிமத்தில் சிக்கல் ஆகியுள்ளது. டெம்பர் படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமம் பெற்றவர் ஹிந்தி டப்பிங் உரிமத்தில் தனக்கும் பங்கு வேண்டும் என்று கேட்டுள்ளதால் அது புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது. இதையடுத்து நேற்றிரவு ஃபிலிம் சேம்பரில் இந்தப் படத்தின் பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தும் சுமூகமான முடிவு எட்டப்படாததால் இன்று அயோக்யா படம் வெளியாகவில்லை.
விஷால் இந்தப் படம் தனக்குப் பெரிய திருப்பத்தை உருவாக்கும் என எண்ணினார். ஆனால் படம் வெளியாகாததால் வருத்தத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். தான் பட வெளியீட்டுக்காகக் காத்திருக்கப் போவதாக அவர் கூறியுள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத் தலைவரின் படம் வெளிவருவதிலேயே சிக்கல் உருவாகியிருப்பது தமிழ்த் தயாரிப்பாளர்களிடையே ஆச்சர்யத்தை உண்டுபண்ணியுள்ளது.