மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது. பாஜக வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டதற்கு உலகத் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துகளை வாரி வழங்கி வருகிறார்கள்.
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், மோடிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு மோடி மற்றும் பாஜவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். வியக்கத்தக்க வகையில் ஒன்றிணைந்த இந்தியா முன்னேற்றமடைவதைக் காண ஆவலாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.
இதற்குப் பதில் அளித்த மோடி, நன்றி ரஹ்மான். வலுவான, வளம் மிகுந்த, முன்னேற்றமான இந்தியாவைக் கட்டமைக்க தீவிர முயற்சி எடுப்பேன் என்று கூறியுள்ளார்.