சென்னை: எனக்கு எந்த பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் ஏதும் நடக்கவில்லை என்று பிரபல கோலிவுட் ஹீரோ மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் சிம்பு. சிறிது காலமாக அவருக்கு பெண் தேடும் முயற்சிகளில் அவருடைய தந்தை டி.ராஜேந்தர் மற்றும் தாயார் உஷா ராஜேந்தர் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்தில் அவருடைய தம்பி குறளரசனுக்கு இஸ்லாமிய பெண் ஒருவருடன் காதல் திருமணம் நடந்தது. இதையடுத்து சிம்புவின் திருமணம் தொடர்பான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் எனக்கு எந்த பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் ஏதும் நடக்கவில்லை என்று நடிகர் சிம்பு மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தாயார் உஷா வழி உறவுப்பெண் ஒருவருடன் சிம்புவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக சமூக வலைத்தளங்களில் சனிக்கிழமை மாலை தகவல்கள் வெளியானது. அது வைரலாகப் பரவியது.
இந்த தகவலை மறுத்து சிம்பு சனிக்கிழமை இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திரையுலகில் பிரபலமாக உள்ள கலைஞர்கள் தினமும் பலரை சந்திப்பது தவிர்க்க முடியாதது. அதை வைத்து அவர்களின் சொந்த வாழ்க்கையை இணைத்து பேசக்கூடாது. கற்பனையான தகவல்களை செய்திகளாக வெளியிட கூடாது. என் திருமணத்தை பற்றி வெளியான தகவல்களில் உண்மையில்லை. அந்த வதந்தியை யாரும் நம்பவேண்டாம்.
என் திருமணத்தை முன்கூட்டியே நானே அறிவிப்பேன். ரசிகர்களும், பொதுமக்களும் கற்பனையாக வெளியாகும் செய்திகளை நம்பவேண்டாம். எந்த பெண்ணுடனும் இதுவரை எனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடக்கவில்லை.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.