அழகு சாதனப் பொருள் விளம்பரத்தில் நடிக்க மறுத்தது ஏன்?: சாய் பல்லவி விளக்கம்!

நானும் குழப்பத்தில் இருந்ததுண்டு. நான் பிரேமம் படத்தில் நடிக்காமல் போயிருந்தால்...
அழகு சாதனப் பொருள் விளம்பரத்தில் நடிக்க மறுத்தது ஏன்?: சாய் பல்லவி விளக்கம்!

ரூ. 2 கோடி வழங்குகிறோம் என்று கூறிய பிறகும் அழகு சாதனப் பொருள் விளம்பரம் ஒன்றில் நடிக்க மறுத்துள்ளார் நடிகை சாய் பல்லவி. அதற்கான காரணத்தை அவர் ஒரு பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார்.

இணையத்தளம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

என் தங்கை பூஜா, சீஸ், பர்க்கர் எல்லாம் சாப்பிடுவாள். நான் அவளை விட வெள்ளையாக உள்ளேன் என்றொரு தாழ்வு மனப்பான்மை அவளுக்கு உள்ளது. கண்ணாடி முன்பு இருவரும் நிற்கும்போது என்னையும் பார்ப்பாள், அவளையும் பார்ப்பாள். அதை நான் பலமுறைக் கவனித்திருக்கிறேன். நீ காய்கறிகள், பழங்கள் சாப்பிட்டால் தான் வெள்ளையாக மாறுவாய் என்று ஒருமுறை அவளிடம் கூறினேன். அவளுக்கு அதெல்லாம் பிடிக்காது என்றாலும் வெள்ளையாகவேண்டும் என்பதற்காகச் சாப்பிட்டாள். அந்தளவுக்கு வெள்ளையாகவேண்டும் என்கிற எண்ணம் என்னை விடவும் சிறிய பெண்ணுக்கு உள்ளது. எனக்கு விளம்பரத்தில் வரும் பணம் எதற்கு? எனக்குப் பெரிய தேவை இல்லை. வீட்டுக்குச் சென்றால் மூன்று சப்பாத்தி, கொஞ்சம் சாப்பாடு சாப்பிடுவேன். ஆனால்,  என்னைச் சுற்றியுள்ளவர்கள் எந்தளவுக்குச் சந்தோஷமாக உள்ளார்கள் என்பது எனக்கு முக்கியம். வெளிநாட்டினரிடம், நீங்கள் ஏன் வெள்ளையாக உள்ளீர்கள், அதனால் புற்றுநோய் வரும் தெரியுமா என நம்மால் சொல்லமுடியாது. ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்களுக்கு அதுதான் தோல் நிறம். அவர்கள்தான் அழகாக இருக்கிறார்கள். 

இதெல்லாம் தெரிந்ததால் மட்டும் நான் பேசவில்லை. நானும் குழப்பத்தில் இருந்ததுண்டு. நான் பிரேமம் படத்தில் நடிக்காமல் போயிருந்தால் நானும் நூறு கிரீம்களை முகத்தில் செலுத்தியிருப்பேன். மேக் அப் இல்லாமல், கண் இமையைத் திருத்தாமல் தான் நான் நடித்தேன். இயக்குநர் அல்போன்ஸிடம் கேட்டேன், என்னைக் கதாநாயகியாக நடிக்கச் சொல்கிறீர்கள், முடி கூட வெட்டவில்லை. இது சரியா, திரையரங்கில் பார்ப்பவர்கள் எழுந்துபோய்விட்டால் என்ன செய்வது எனக் கேட்டேன். பிரேமம் வெளியான முதல் நாளன்று என் அம்மாவிடம் சொல்கிறேன், அம்மா குரலைப் பார், ஆண் குரல் போல உள்ளது என்கிறேன். இப்போதும் போனில் என்னிடம், சார் போனை அம்மாவிடம் கொடுக்கிறீர்களா என்றுதான் கேட்பார்கள். அதற்காக நிறைய முறை பெண்தன்மை கொண்ட குரலில் ஹலோ எனப் பேசியுள்ளேன். இதனால், பாதுகாப்பின்மையை நானே பலமுறை உணர்ந்துள்ளேன். என்னால் முடிந்தவரை சூழலைக் கொஞ்சம் மாற்றுகிறேன். அதனால் தான் அந்த விளம்பர வாய்ப்பை மறுத்தேன் என்று கூறியுள்ளார். 

2015-ல் பிரேமம் படத்தில் நடித்துக் கவனம் பெற்ற சாய் பல்லவி, சூர்யாவுடன் இணைந்து என்ஜிகே படத்தில் தற்போது நடித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com