தமிழ் சினிமாவில் வெகு சில படங்களே கடலில் படமாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மொத்த படத்தில் 75 சதவிகிதம் இந்தியப் பெருங்கடலில் படமாக்கப்பட்டுள்ள படம் 'ஜூவாலை'.
இந்தியப் பெருங்கடல் கொண்டுள்ள சிறு சிறு தீவுகளிலும் மீதமுள்ள படம் வளர்ந்து வருகிறது. 'ஜூவாலை' படத்தை மனுஷா தயாரிக்க ரஹ்மான் ஜிப்ரீல் நடித்து இயக்குகிறார். ரஹமான் ஜிப்ரீல் இயக்குநர் பாலுமகேந்திரா மற்றும் ஜோதி கிருஷ்ணா ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றி உள்ளார். தன் முதல் படம் கடலைச் சார்ந்தும், சூழ்நிலைகளைச் சார்ந்தும் படமாக்க வேண்டி இருப்பதால், பெரிய ஹீரோக்களை வைத்து இயக்குவதில் உள்ள சிரமங்களை உணர்ந்தவர் அதற்காக, தானே நீண்ட முடி, தாடி சகிதம் தயாராகி உள்ளார்.
கடல் என்ற கதைக்களத்தை கையில் எடுத்து இருந்தாலும், 'ஜூவாலை’ என பெயர் வைத்து இருப்பதில் ஒரு ஆழமான கருத்தை அடக்கியுள்ளது இந்தப் படம் என்கிறார் இயக்குநர் ரஹமான் ஜிப்ரீல்.
காதல், காமம், கோபம், வெறுப்பு போன்றவை ஒரு ஜூவாலை மாதிரிதான். நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரிந்து கொண்டே இருக்கிறது. அதில் பழிவாங்குதலும் ஒரு ஜூவாலை தான். நமக்கான வாழ்வாதாரமாகக் கொடுக்கப்பட்டுள்ள உடல், கடல் மாதிரி இருந்தாலும் அதன் உள்ளடக்கமாக இருக்கும் உணர்வுகள் நன்மை, தீமை அடங்கிய ஜூவாலையை வெளிப்படுத்திக் கொண்டேதான் இருக்கிறது. நமது உடமை, உரிமை ஏதாவது ஒன்றிற்கு இழப்பு, பாதிப்பு வரும்போது அங்கு பழிவாங்கும் ஜூவாலை பற்றி எரிய வேண்டியது அவசியமாகிறது. ஹீரோ தனது வாழ்விடத்தின் பழிவாங்குதலை ஜூவாலை ஆக்குகிறான். அது கடல் என்ற கதைக் களத்தில் வெளிப்படுகிறது என்கிறார் இயக்குநர் ரஹமான்.
படம் மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வருகிறது. ஹாலிவுட் கேமராமேன் மைக் முஸ்சாம்ப் (Mike Muschamp) ஆழ்கடல் காட்சிகளைப் படம் பிடித்து வருகிறார். இவர் லண்டனைச் சேர்ந்தவர். பிரின்ஸ் ஆஃப் த சிட்டி, பைலட் கஃபே போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். முதன்முறையாக ஒரு தமிழ் படத்தில் பணியாற்றுகிறார்.