பாபர் மசூதி நில வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், இயக்குநர் பா. ரஞ்சித் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிவீட் செய்துள்ள பா. ரஞ்சித்,
"ஒவ்வொரு நாளும் சட்டமும் சனநாயகமும் *ஒரு* சார்புடையதாக மாறிக்கொண்டே போனால்... தீர்ப்புகள் அதிகாரத்தின் மனநிலையை பிரதிபலிக்கிறது என்றால்... “சட்டத்தின் முன் எப்படி எல்லோரும் சமம்???” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாபர் மசூதி நில வழக்கில், சர்ச்சைக்குரிய அந்த இடம் ஹிந்துக்களுக்கே சொந்தமானது என்றும், அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்றும் உச்சநீதிமன்றம் நேற்று (சனிக்கிழமை) தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு இருதரப்புக்கும் சாதகமாகவே வந்துள்ளதாகவும், அதனால் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும் எனவும் பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதேசமயம், சட்டத்தின்படியும், ஆதாரத்தின்படியும் தீர்ப்பு வழங்காமல் நம்பிக்கையின்பேரில் தீர்ப்பு வழங்கியிருப்பதனால் அரசியல் தலையீடு இருக்கலாம் எனவும் தீர்ப்பு குறித்து இன்னொரு பக்கம் கருத்துகள் பதிவாகி வருகிறது.
இந்நிலையில், இயக்குநர் பா. ரஞ்சித் தற்போது கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.