இந்தியா - வங்கதேசம் ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் கொல்கத்தாவில் நாளை நடைபெறவுள்ளது. இந்த ஆட்டம் இந்தியா எதிா்கொள்ளவிருக்கும் முதல் பகலிரவு டெஸ்ட் ஆட்டமாகும். இளஞ்சிவப்பு (பிங்க்) நிற பந்து இந்த ஆட்டத்தில் பயன்படுத்தப்படவுள்ளது.
இந்நிலையில் பகலிரவு டெஸ்ட் நடைபெறவுள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில், தான் நடித்த மர்தானி 2 படத்தை விளம்பரப்படுத்தவுள்ளார் நடிகை ராணி முகர்ஜி. கோபி புத்ரன் இயக்கியுள்ள மர்தானி 2 படம் டிசம்பர் 13 அன்று வெளியாகவுள்ளது. இப்படத்தில் காவல்துறை அதிகாரி வேடத்தில் ராணி முகர்ஜி நடித்துள்ளார்.
ஈடன் கார்டன்ஸ் மைதானத்துக்கு செல்வது குறித்து ராணி முகர்ஜி கூறியதாவது:
ஈடன் கார்டன்ஸில் முதல்முறையாக கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்க்கவுள்ளேன். அந்த மைதானத்தில் கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்க்கும் அனுபவம் அற்புதமாக இருக்கும் என என் பெற்றோர் சொல்லியிருக்கிறார்கள். எனவே எனக்குப் புது அனுபவம் கிடைக்கப் போகிறது. அங்குள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஆட்டத்தைத் தொலைக்காட்சியில் பார்க்கும் பல லட்சம் ரசிகர்களுக்கும் மர்தானி 2 படம் குறித்து பேசவுள்ளேன் என்று கூறியுள்ளார்.