இந்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சர்வதேச திரைப்பட விழா கோவா தலைநகர் பனாஜியில் கடந்த 20-ஆம் தேதி ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் சுமார் 200 நாடுகளில் இருந்து பிரதிநிதிகளும் 12000- த்திற்கும் அதிகமான பங்கேற்பாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் சார்பில் Film Bazaar எனும் சினிமா சந்தை மூலம் இந்திய திரைப்பட படைப்பாளிகளை உலக படைப்பாளிகளுடன் இணைக்கும் நிகழ்வும்இவ்விழாவில் நடந்து வருகிறது.
இதில் தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ்நாடு திரைப்பட துறையில் பிரதிநிதியாக கலந்து கொண்ட செய்தி மற்றும் விளம்பரத்துரை அமைச்சர் கடம்பூர் ராஜு தமிழ்நாட்டில் படம்பிடிக்க வருமாறு உலக திரைப்பட படைப்பாளிகளுக்கு அன்புடன் அழைப்பு விடுத்தார்.
தமிழ்நாட்டில் படப்பிடிப்பு நடத்த வரும் அனைத்து படைப்பாளிகளுக்கும் ஒற்றை சாளர முறையில் படப்பிடிப்பு வசதிகளை செய்து தர அரசு எப்பொழுதும் தயாராக உள்ளது என்று உறுதி கூறிய அமைச்சர் தமிழ்நாடு அரசு திரைப்படதுறையினருக்கு செய்து வரும் சாதனைகளை பட்டியலிட்டார்.
தொடர்ந்து தமிழ்நாட்டில் இருந்து தங்கள் படங்களை விழாவிற்கு கொண்டு வந்திருந்த சுயாதீன திரைப்பட படைப்பாளிகள சந்தித்த அமைச்சர் அவர்களை ஊக்கப்படுத்தினார். இந்நிகழ்வில் தேசிய திரைப்படவளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குனர் கல்யாணி, சென்னை மண்டல் இயக்குனர் ராமகிருஷ்ணன், விளாத்திகுளம் எம்எல்ஏ சின்னப்பன், டாக்டர் ரமேஷ், தென்னிந்திய திரைப்பட சம்மேள செயலாளர் ரவி கோட்டாக்காரா, திரைப்பட இயக்குனர் இரா பார்த்திபன், லட்சுமி ராமகிருஷ்ணன். ஏவிஎம்சண்முகம், அருண் வைத்தியநாதன், தயாரிப்பாளர்கள் வெங்கட், எம்எஸ்மகேஷ், நடிகை அனுபமா , நடிகர் கிஷோர் ஆகியோர் பங்கேற்றனர். நூற்றுக்கும் அதிகமான தமிழ் திரைப்பட துறை மாணவர்களும் திரைப்படத் துறையினரும் இவ்விழாவில் பங்கேற்றனர்.