சென்னை: பிரபல சின்னத்திரை நடிகைக்கு செல்போனில் தொல்லை கொடுத்த புகாரின் பேரில் வெளிநாட்டில் இருந்து திரும்பிய வேலூர் வாலிபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சென்னை மதுரவாயலைச் சேர்ந்தவர் நடிகை நிலானி. இவர் சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். திருமணமாகி குழந்தைகள் உள்ள இவர் சில ஆண்டுகளாகவே கணவரை பிரிந்து போரூரில் தனியாக வசித்து வருகிறார்.
கடந்த ஆண்டு நிகழ்ந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஷூட்டிங்கில் போலீஸ் உடையில் அவர் பேசிய விடியோ சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் இதுதொடர்பான புகாரில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சர்ச்சை அடங்கிய உடனேயே வாலிபர் ஒருவர் அவரை காதலித்து, பின்னர் நடந்த தகராறில் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்திலும் நிலானியின் பெயர் அடிபட்டது. அதன் விளைவாக நிலானி தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் நடந்தது.
இதையடுத்து நிலானிக்கு வேலூர் காட்பாடியைச் சேர்ந்த மஞ்சுநாதன் (32)என்ற இளைஞர் அறிமுகமானார். இவர் வெளிநாட்டில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். ஒருகட்டத்தில் மஞ்சுநாதனுக்கு திருமணம் ஆன் தகவல் அறிந்து நிலானி அவரிடமிருந்து விலகியுள்ளார். ஆனால் இதனால் ஆத்திரமுற்ற மஞ்சுநாதன் அவருக்கு செலவு செய்த பணம் தொடர்பாக நிலானியிடம் சண்டை இட்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.
இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை நிலானி புகார் அளித்திருந்தார். இந்த புகார் மனு மீது போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.
வெளிநாட்டில் இருந்து மஞ்சுநாதன் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பினார். இதையடுத்து மஞ்சுநாதனை சனிக்கிழமையன்று கைது செய்த போலீசார் அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். விசாரணை நடைபெற்று வருகிறது.