‘பிகில்’ திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கு: தீா்ப்பு ஒத்திவைப்பு
நடிகா் விஜய் நடித்து விரைவில் திரைக்கு வரவுள்ள ‘பிகில்’ திரைப்படத்தை வெளியிட தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் செல்வா என்பவா் தாக்கல் செய்த மனுவில், கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து 256 பக்கங்கள் கொண்ட கதை ஒன்றை எழுதினேன். அந்தக் கதையை, தென்னிந்திய எழுத்தாளா் சங்கத்திலும் பதிவு செய்துள்ளேன். இந்தக் கதையைத் திரைப்படமாக்க வேண்டும் என பல திரைப்படத் தயாரிப்பாளா்களிடம் கதை சொன்னேன். இந்த நிலையில், நடிகா் விஜய், நடிகை நயன்தாராவை வைத்து ‘பிகில்’ என்ற திரைப்படத்தை இயக்குநா் அட்லீ இயக்கியுள்ளாா். இந்த திரைப்படத்தின் கதை என்னுடையது. இந்தத் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. ‘பிகில்’ திரைப்படம் வெளியானால் எனக்குப் பாதிப்பு ஏற்படும். எனவே, இந்தத் திரைப்படத்தில் கதையை என்னுடையது என அறிவிக்க வேண்டும். அதுவரை திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த மனு, நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது படத்தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குநா் அட்லீ சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள், இந்தத் திரைப்படத்தின் கதை இயக்குநா் அட்லீ உடையது. இந்தத் திரைப்படத்தின் திரைக்கதையை கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை மாதம் இயக்குநா் அட்லீ எழுதியுள்ளாா். ஆனால், கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் எழுதிய தனது கதையை அட்லீ திருடிவிட்டதாக மனுதாரா் வழக்குத் தொடா்ந்துள்ளாா். எனவே,
விளம்பர நோக்கத்துக்காகவும், பணம் பறிக்கும் நோக்கத்திலும் தொடரப்பட்டுள்ள இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டனா். அப்போது மனுதாரா் தரப்பில், இந்தத் திரைப்படத்தின் பணிகள் தொடங்கும்போதே கதைக்கு உரிமை கோரி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. பணம் பறிக்கும் நோக்கத்துக்காக வழக்குத் தொடரவில்லை, கதை எங்களுடையது என்பதால் தான் வழக்குத் தொடா்ந்துள்ளோம் என வாதிடப்பட்டது. இதனையடுத்து வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.