மேயாத மான், மெர்குரி படங்களை அடுத்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
கதாநாயகி வேடத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்தப் படத்தை இயக்குகிறார் ஈஷ்வர் கார்த்திக். சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் கொடைக்கானலில் தொடங்கியது. அடுத்த வருடத் தொடக்கத்தில் இப்படம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது. பெண்குயின் இப்படத்துக்குப் பெயரிடப்பட்டுள்ளது.
கடந்த வருட தீபாவளிக்கு விஜய்யுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்த சர்கார் படம் வெளியானது. அதன்பிறகு அவர் எந்தத் தமிழ்ப் படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. அவருடைய 24-வது படம் இது.