வருடத்துக்கு 200 படங்கள் வெளியானால் அதில் 10% படங்கள் கூட வெற்றி பெறுவதில்லை என்பது தான் தமிழ்த் திரையுலகின் மனக்குறைகளில் ஒன்று. ஆனால் கடந்த ஒரு மாதத்தில் நல்ல செழிப்புடன் உள்ளது கோலிவுட்.
கடந்த செப்டம்பர் 27 அன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கிய நம்ம வீட்டுப் பிள்ளை வெளியாகி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றது. அதன்பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படம் வெளியானது. பெரிய வெற்றி பெற்றதோடு பல விவாதங்களையும் இந்தப் படம் உருவாக்கியது. தற்போது தீபாவளிக்கு பிகில், கைதி என இரண்டு படங்கள் வெளிவந்து, இரண்டுமே ஹிட் ஆகியுள்ளது. இதில் பிகில் படம் வசூலில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. கைதி படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நான்குப் படங்களுமே ஒவ்வொரு விதமானவை. இருந்தும் தமிழ் ரசிகர்கள் இந்த நான்குப் படங்களுக்கும் பலத்த ஆதரவை அளித்துள்ளார்கள். இதன்மூலம் நல்ல படத்தைத் தந்தால் ஒரே மாதத்தில் நான்கு ஹிட் படங்களையும் தரமுடியும் என்பது நிரூபணமாகியுள்ளது.
இப்படி, கடந்த ஒரு மாதத்தில் நான்கு ஹிட் படங்கள் கிடைத்ததால் கோலிவுட்டில் ஆரோக்கியமான சூழல் நிலவுகிறது. அடுத்த இரு மாதங்களில் இன்னும் எத்தனை வெற்றிப் படங்களை கோலிவுட் தரப்போகிறது என்று பார்க்கலாம்.