சென்னை: தீபாவளிக்கு வெளியாகியுள்ள நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படம் எகிப்திலும் வெளியாகி சாதனை படைத்துள்ளது.
ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடித்துள்ள பிகில் படத்தை இயக்கியுள்ளார். மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் இணையும் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் கடந்த வருடம் இறுதியில் வெளியிட்டது.
இப்படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு.
தீபாவளியை முன்னிட்டு கடந்த வெள்ளியன்று வெளியான பிகில் படம் தமிழ்நாட்டில் முதல் நான்கு நாள்களில் மட்டும் ரூ. 75 கோடியை வசூலித்துள்ளது. சென்னையில் இதன் நான்கு நாள் வசூல் ரூ. 7 கோடியைத் தாண்டியுள்ளது. இந்த வருடம் அதிகம் வசூலித்த 3-வது தமிழ்ப் படம் என்கிற பெருமையை நான்கே நாள்களில் அடைந்துள்ளது. மேலும், அடுத்தச் சில நாள்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 100 கோடி வசூலை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பிகில் திரைப்படம் புதனன்று எகிப்திலும் வெளியாகி சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் எகிப்தில் வெளியான முதல் தமிழ் திரைப்படம் என்ற சரித்திரத்தையும் பிகில் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.