தமிழ், தெலுங்குப் படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டு ஹிந்தி படவுலகுக்குச் சென்றவர் ஸ்ரீதேவி. ஒரு கட்டத்தில் இந்தியா முழுமைக்கும் ரசிகர்களைக் கொண்டிருந்தார் அவர். அவரது திடீர் மறைவுக்குப் பின்னர் மகள் ஜான்வி நடிகை ஆனார். இந்தநிலையில் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க ஜான்வியை அணுகிய போது அவர் நடிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஜான்வியின் தந்தையும், 'நேர்கொண்ட பார்வை' தயாரிப்பாளருமான போனிகபூர் பேசும் போது...
'தென்னிந்தியப் படங்களை எங்கள் குடும்பமே விரும்பிப் பார்க்கும். ஸ்ரீதேவி இங்கு நிறையப் படங்களில் நடித்திருக்கிறார். இங்குள்ள நடிகர்களுடன் நாங்கள் நல்ல உறவுடன் இருக்கிறோம். ஜான்வி தென்னிந்தியப் படங்களை ஏற்று நடிக்கத் தயாராக இருக்கிறார். ஆனால் அதற்கு நல்ல கதை அமைய வேண்டும். அந்த தருணத்துக்காக காத்திருக்கிறோம். ஆனால் இதுவரை அப்படியொரு கதை அவருக்குக் கிடைக்கவில்லை. தென்னிந்தியப் படங்களை ஜான்வி நிராகரிக்கிறார் என்று சொல்வதெல்லாம் அடிப்படை ஆதாரமற்றவை' என்று தெரிவித்துள்ளார் போனிகபூர்.