ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடிக்கும் பிகில் படத்தை இயக்கி வருகிறார். மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் இணையும் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் கடந்த வருடம் இறுதியில் வெளியிட்டது. நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு. ஜனவரி 19 அன்று பூஜை நடைபெற்றது. தீபாவளிக்கு வெளியாகிறது.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற பிகில் பாடல்கள் வெளியீட்டு விழாவில் நடிகர் விவேக் பேசியதாவது:
1960-ல் இரும்புத்திரை என்கிற படம் வெளியானது. நடிகர் திலகம் சிவாஜியும் வைஜெயந்தி மாலாவும் நடித்த படம் அது. அந்தப் படத்தில் நெஞ்சில் குடியிருக்கும் என்றொரு பாடல் உண்டு. நெஞ்சில் குடியிருக்கும் என்கிற வார்த்தைகளுக்கு அப்போது பெரிய தாக்கம் இல்லை. ஆனால் அந்த நெஞ்சில் குடியிருக்கும் என்கிற வார்த்தைகளுக்கு மகத்துவமும் மந்திர சக்தியும் வந்தது, தளபதி வாயிலிருந்து அந்த வார்த்தைகள் வந்த பிறகுதான் என்று பேசினார்.
விவேக்கின் இந்தப் பேச்சுக்கு சிவாஜி சமூகநலப் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவாஜியின் அருமையான பாடலைப் பொது மேடையில் விவேக் கிண்டலடித்திருக்கிறார். இதுபோலத் தொடர்ந்து செய்தால் அவருக்கு எதிராக ரசிகர்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கு விவேக் பதில் அளித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது: 1960ல் இரும்புத்திரை படத்தில் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் பாடிய பாடலின் முதல் வரி, நெஞ்சில் குடி இருக்கும். அப்போது அது காதல் உணர்வைக் குறித்தது. ஆனால் இப்போது சகோ விஜய் அதைச் சொல்லும்போது மந்திர சக்தி வார்த்தையாக இருக்கிறது. இதுவே நான் பேசியது. அன்பு உள்ளங்கள் புரிந்து கொள்க என்று கூறியுள்ளார்.