உத்தம வில்லன் பட வெளியீட்டின் போது தன்னிடமிருந்து வாங்கிய ரூ. 10 கோடியை நடிகர் கமல் ஹாசன் திருப்பித் தரவில்லை என்று புகார் அளித்துள்ளார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.
2015-ம் ஆண்டு கமல், ஆண்டிரியா, பூஜா குமார் நடிப்பில் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உருவான படம் - உத்தம வில்லன். இசை - ஜிப்ரான்.
இந்நிலையில் கமல் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் அவர் கூறியிருப்பதாவது:
2015-ம் ஆண்டு உத்தம வில்லன் பட வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டத்தையடுத்து என்னை அணுகினார் கமல். எனது தயாரிப்பில் ஒரு படம் நடிப்பதாகக் கூறி முன்பணமாக ரூ. 10 கோடியைக் கேட்டுப் பெற்றார். ஆனால் நான்கு ஆண்டுகளாகியும் நடிக்க அவர் முன்வரவில்லை. மேலும் ரூ. 10 கோடியையும் திருப்பித் தரவில்லை. இந்தப் பிரச்னையில் தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு எனக்குச் சேரவேண்டிய ரூ. 10 கோடியைப் பெற்றுத் தரவேண்டும் என்று புகாரில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தப் புகாரின் அடிப்படையில் கமல் ஹாசனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தப் புகாருக்குப் பதில் அளித்துள்ள கமல் தரப்பு, லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திடம் மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஞானவேல் ராஜாவிடம் எந்தவித உத்தரவாதமும் தரவில்லை என்று கூறியுள்ளது.