அழகர்சாமியின் குதிரை படத்தில் அப்புக்குட்டிக்கு ஜோடியாக நடிக்கப் பல நடிகைகள் முன்வரவில்லை என்று இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.
கதிர் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ‘பால் டிப்போ’ கதிரேசன் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் ‘வாழ்க விவசாயி’. தேசிய விருது பெற்ற நடிகர் அப்புக்குட்டி, நடிகை வசுந்தரா, ஹலோ கந்தசாமி, ஸ்ரீகல்கி, முத்துராமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்துக்குகு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் பி.எல்.பொன்னி மோகன். அறிமுக இசையமைப்பாளர் ஜெய்கிருஷ் இசையமைத்திருக்கிறார்.
இந்த படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை பிரசாத் லேபில் நேற்று நடைபெற்றது. நிகழச்சியில், இயக்குநர்கள் சுசீந்திரன், ஸ்ரீபாலாஜி, சார்லஸ், ராசி.அழகப்பன், தயாரிப்பாளர்கள் கலைப்புலி சேகரன், டி.சிவா, பால் டிப்போ கதிரேசன், ரவீந்திரன் சந்திரசேகரன், நடிகர் அப்புக்குட்டி, நடிகை வருந்தரா உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
நிகழ்சசியில் இயக்குநர் சுசீந்திரன் பேசும்போது,
“அழகர்சாமியின் குதிரை படத்திற்குப் பிறகு அப்புக்குட்டியைச் சந்திக்கும் போதெல்லாம். சரியான கதையைத் தேர்ந்தெடுத்து நடிக்கவேண்டும் என்று அறிவுறுத்திக் கொண்டேயிருப்பேன். ஏனெனில் அவர் ஒரு சிறந்த நடிகர்.
அவருடைய ஸ்கிரீன் பிரசென்ஸ் நன்றாக இருக்கும். நீண்ட நாளிற்கு பிறகு அப்புக்குட்டி யதார்த்தமாக திரையில் தோன்றியிருக்கிறார். இதற்காக இயக்குநருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அழகர்சாமியின் குதிரை படத்தில் அப்புக்குட்டி நடிக்கும் போது, அவருக்கு ஜோடியாக நடிக்கப் பல நடிகைகள் முன்வரவில்லை. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை வசுந்தராவை மனதார பாராட்டுகிறேன். நடிகை வசுந்தரா சிறந்த நடிகைஎன்பதை பக்ரீத் உள்ளிட்ட பல படங்களில் நிரூபித்திருக்கிறார்.
முதல் படத்தில் தொழில்நுட்பக் கலைஞர்கள் அமைவது கடினம். இந்தப் படத்தின் இயக்குநருக்கு அது அமைந்திருக்கிறது. அதற்காகப் பாராட்டுகள். இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர் என அனைவரும் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள் என்பது படத்தின் டீஸர் மற்றும் இசையை பார்க்கும் போது உணர முடிகிறது.
தற்போதைய சூழலில் 'வாழ்க விவசாயி ' என்கிற டைட்டிலில் படம் வெளியாகியிருக்கிறது என்றால் இதைத் திரையரங்கத்திற்கு சென்று பார்ப்பவர்களின் கூட்டம் குறைவு தான். ஆனால் படத்தில் கமர்சியல் அம்சங்கள் இருப்பதால் படம் வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.
ஒரு தயாரிப்பாளர் என்பவர் இயக்குநருக்கு அப்பா அம்மாவிற்குச் சமம். ஏனெனில் அப்பா அம்மாவிற்குப் பிறகு ஒரு இயக்குநரை நம்பி பணத்தை முதலீடுசெய்பவர்கள் தயாரிப்பாளர்கள் தான். விவசாயத்தை மையமாகக்கொண்ட இந்தக் கதையையும், அப்புக்குட்டி போன்ற நடிகர்களையும் நம்பி படத்தைத் தயாரித்த இந்தத் தயாரிப்பாளரை நான் மனதார வாழ்த்துகிறேன்.
இந்தப் படத்தை வெற்றி பெறவைக்கவேண்டும் என்று ரசிகர்களைக் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படத்தை வாங்கி வெளியிடும் லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்திரன் சந்திரசேகரன் அவர்களுக்கும் என்னுடைய நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.” என்றார்.