ராதே படக்குழுவினர் உள்பட 25,000-க்கும் மேற்பட்ட பாலிவுட் தொழிலாளர்களுக்கு உதவுவதாகப் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் வாக்குறுதி அளித்துள்ளார்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 59,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 3000 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரைப்படப் படப்பிடிப்புகள் அனைத்தும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் தான் நடித்து வரும் ராதே படக்குழுவினர் உள்பட 25,000-க்கும் மேற்பட்ட பாலிவுட் தொழிலாளர்களுக்கு உதவுவதாகப் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் வாக்குறுதி அளித்துள்ளார். ராதே படத்தின் ஒப்பனைக் கலைஞர் சுபாஷ் கபூர், தன்னுடைய வங்கிக் கணக்குக்கு சல்மான் கான் பணம் அனுப்பியுள்ளதை உறுதி செய்துள்ளார்.
FWICE என்கிற திரைப்படத் தொழிலாளர் சங்கத்தில் உள்ள 25,000 தொழிலாளர்களுக்கும் உதவுவதாக சல்மான் கான் வாக்குறுதியளித்துள்ளார். அந்த அமைப்பின் தலைவர் கூறியதாவது: உதவி கேட்டு சல்மான் கானை அணுகினோம். சங்கத்தில் தற்போதைய நிலைமையால் கஷ்டப்படும் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் கேட்டார். 25,000 தொழிலாளர்கள் சிரமத்தில் உள்ளார்கள் எனத் தெரிவித்தோம். உடனே அவர்களுக்கு உதவுவதாக வாக்குறுதி அளித்துள்ளார் என்று கூறியுள்ளார்.
பிரபுதேவா இயக்கத்தில் ராதே என்கிற படத்தில் சல்மான் கான் நடித்து வருகிறார்.