கரோனா தனிமை நோயாளிகளுக்கான முகாமாக தனது நான்கு மாடி கட்டடத்தை மும்பை மாநகராட்சிக்கு வழங்க முன்வந்துள்ளார் பிரபல நடிகர் ஷாருக் கான்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 59,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 3000 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மும்பையில் உள்ள நான்கு மாடி அலுவலகத்தை கரோனா நோயாளிகளைத் தனிமைப்படுத்திக் கொள்ளும் மையமாக மாற்றிக் கொள்வதற்கு பிரபல நடிகர் ஷாருக் கானும் அவருடைய மனைவி கெளரியும் முன்வந்துள்ளார்கள். கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் ஆகியோர் தங்கள் அலுவலகத்தைப் பயன்படுத்திட உரிய ஏற்பாடுகளும் தேவையான ஒத்துழைப்பும் வழங்கப்படும் என மும்பை மாநகராட்சிக்கு இருவரும் தெரிவித்துள்ளார்கள். இத்தகவலை மும்பை மாநகராட்சி, ட்விட்டரில் தெரிவித்து ஷாருக் கானுக்கும் கெளரிக்கும் நன்றி தெரிவித்துள்ளது.