எனக்குப் பட வாய்ப்புகள் இல்லை என செய்திகள் வெளிவருகின்றன. ஆனால் நான் 365 நாள்களிலும் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறேன் என்று கூறியுள்ளார் பிரபல நடிகை தமன்னா.
ஐஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தமன்னா கூறியதாவது:
தென்னிந்தியத் திரையுலகில் வெவ்வேறு வகையான படங்களில் நடித்து வருகிறேன். நான் பாலிவுட்டிலிருந்து தள்ளி இருப்பதற்குக் காரணமே, ஒரே வகையான படங்களில் நடித்துவிடக்கூடாது என்பதால்தான். சினிமா மீது எனக்கு அளவு கடந்த ஆர்வம் உண்டு. ஒரே திரையுலகில் மட்டும் நடித்து என்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளவில்லை. என்னைப் பற்றி பல தவறான கருத்துகள் உள்ளன.
சமீபத்தில் நான் கேட்ட விநோதமான செய்தி - எனக்குப் பட வாய்ப்புகள் இல்லை என்பதுதான். எனக்கு பாலிவுட்டில் எதிர்காலம் இல்லை என்றும் எழுதுகிறார்கள். இதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் 365 நாள்களிலும் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறேன். இதனால் தான் என்னால் பல திரையுலகங்களில் மாறி மாறி நடிக்கமுடிவதில்லை. நான் எந்தப் போட்டியிலும் இல்லை. நான் யாருக்கும் என்னை நிரூபிக்கவேண்டியதில்லை என்று கூறியுள்ளார்.