சென்னை: ‘ஊரடங்கு காலத்தில் நான்’ என்ற தலைப்பில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ட்விட்டர் கணக்கில் வெளியாகியுள்ள விடியோ அவரது தொண்டர்களையும் ரசிகர்களையும் ஒருசேர நெகிழ வைத்துள்ளது.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 16,365 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 521 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் இந்த மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த உத்தரவு மே மாதம் 3-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த கரோனா காலத்தில் திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் தங்கள் நேரத்தை செலவிடும் முறை பற்றி, பல்வேறு விடியோ மற்றும் எழுத்துப் பதிவுகளை தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிடுகின்றனர்.
இந்நிலையில் ‘ஊரடங்கு காலத்தில் நான்’ என்ற தலைப்பில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ட்விட்டர் கணக்கில் வெளியாகியுள்ள விடியோ அவரது தொண்டர்களையும் ரசிகர்களையும் ஒருசேர நெகிழ வைத்துள்ளது.
‘ஊரடங்கு காலத்தில், நான் எனது இல்லத்தில்’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த விடியோவில், விஜயகாந்தை நாற்காலியில் அமரவைத்து, அவரது மனைவி பிரேமலதா அவருக்கு முகச்சவரம் செய்துவிட்டு, தலைக்கு சாயம் அடித்து, கை கால்களில் உள்ள நகங்களை வெட்டி விடும் காட்சி வைரலாகி வருகிறது. இறுதியில் கேமராவை பார்த்து சிரித்தவாறு விஜயகாந்த் தனது தலையைச் சீவிக் கொள்கிறார். இந்த விடியோவில் பின்னணயில் விஜயகாந்த் நடித்து பெரும்வெற்றி பெற்ற “வானத்தைப் போல” படத்தில் இருந்து ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ பாடல் ஒலிக்கிறது
நோய்வாய்பட்டு உடல்நலம் குன்றியுள்ள விஜயகாந்த் குழந்தை போல் நாற்காலியில் அமர்ந்திருக்க, அவரது மனைவி அவருக்கு பணிவிடை செய்யும் காட்சிகள் விஜயகாந்த ரசிகர்களையும், தேமுதிக தொண்டர்களையும் ஒருசேர நெகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.