1983-ம் ஆண்டு கிரிக்கெட்டில் உலகக் கோப்பையை இந்தியா வென்ற கதை ‘83’ என்ற பெயரில் படமாக உருவாகியுள்ளது. கபீா்கான் இயக்கியுள்ள இந்தப் படத்தில், கபில் தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீா் சிங் நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் ஜீவா நடித்துள்ளார். 83-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற ஒவ்வொரு வீரரின் கதாபாத்திரங்களிலும் பொருத்தமானவா்களைத் தோ்வு செய்து நடிக்க வைத்துள்ளனா். இந்திய கிரிக்கெட் ரசிகா்கள் மத்தியில் இந்தப் படம் பெரிதும் எதிா்பாா்க்கப்படுகிறது.
ஏப்ரல் 10-ம் தேதி வெளியாவதாக இருந்த இந்தப் படத்தின் வெளியீடு கரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதாலும் கரோனா அச்சுறுத்தலாலும் திரையரங்குகள் இயங்குவது குறித்து கேள்விக்குறியாக உள்ளது. எனவே பல படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல 83 படமும் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக ரூ. 143 கோடி வரை விலை பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் 83 படக்குழு இதை மறுத்துள்ளது. ரிலையன்ஸ் எண்டர்டெயிண்மெண்ட் குழுவின் தலைமைச் செயல் அதிகாரி ஷிபாஷிஷ் சர்கார் கூறியதாவது:
ஓடிடி தளத்தைச் சேர்ந்தவர்கள் படத்தின் உரிமையை வாங்க ஆர்வம் காட்டினார்கள். ஆனால், நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாவது குறித்த எந்தவொரு உரையாடலிலும் நாங்கள் ஈடுபடவில்லை. அடுத்ததாக நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை காத்திருப்போம். பிறகுதான் புதிய முடிவை எடுப்போம் என்று கூறியுள்ளார்.