சந்தானம் நடிப்பில் உருவாகி நீண்ட நாளாக வெளியீட்டுக்குக் காத்திருக்கும் படம் - சர்வர் சுந்தரம். கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் வைபவி ஷந்திலியா கதாநாயகியாக நடித்துள்ளார். மறைந்த நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் நாகேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்று நடித்துள்ளார்கள். கதை எழுதி இப்படத்தை இயக்கியவர், ஆனந்த் பால்கி. பி.கே.வர்மா ஒளிப்பதிவில், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 2018 ஜூலை மாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட இந்தப் படத்தை ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு இந்த வருட ஆரம்பத்தில் வெளியிடத் திட்டமிடப்பட்டது.
முதலில் ஜனவரி 31 அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதே தினத்தில் சந்தானம் நடித்த டகால்டி படமும் வெளியாகவிருந்ததால் பிப்ரவரி 14 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பிறகு இப்படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது. பிப்ரவரி 21 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இதுவரை வெளியாகாத சர்வர் சுந்தரம் படத்தை இணையத்தில் நேரடியாக வெளியிடப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இதுபற்றி இயக்குநர் ஆனந்த் பால்கி, சினிமா எக்ஸ்பிரஸ் இணையத்தளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
20 வருடங்களாக எனது முதல் படத்தின் வெளியீட்டுக்குக் காத்திருக்கும் எனக்கு இது வேதனையைத் தருகிறது. தற்போதைய சூழல் திரையரங்கில் வெளியிடச் சாதகமாக இல்லை. பல சிரமங்களைச் சந்தித்தும் கடைசியில் ஓடிடி தளத்தில் வெளியிடவே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஓடிடி தளத்துக்கும் தயாரிப்பாளருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு நான் ஏற்பாடு செய்துள்ளேன்.
ஓடிடி தளத்தில் வெளியிடலாமா அல்லது அக்டோபர், நவம்பர் வரை காத்திருந்து திரையிடலாமா என எனக்கும் குழப்பம் தான். ஆனால் 2016 முதல் இன்னமும் போராட்டத்தில் தான் உள்ளோம். இப்படத்தின் டிரெய்லர், சந்தானத்தின் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. ஆனால் அடுத்தக்கட்டத்துக்கு நகராமல் ஒரே நிலையில் எவ்வளவு காலம் தான் இருக்க முடியும்?
படத்தின் தொலைக்காட்சி உரிமை, ஒரு டிவி நிறுவனத்திடம் உள்ளது. எனவே ஓடிடி உரிமை குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் லாபம் பார்க்க நாங்கள் விரும்பவில்லை. வட்டியெல்லாம் சேர்த்தாலும் அதிக தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதைத் திரும்ப எடுத்துவிட்டால் போதும். என் படத்துக்காகச் செலவு செய்த தயாரிப்பாளர், நஷ்டம் அடையக் கூடாது என்று பேட்டியளித்துள்ளார்.