திறமையான கலைஞன் மறைந்து விட்டார்: சுசாந்த் சிங் பற்றி உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து

இந்த மரணம் பற்றி எல்லோருக்கும் கருத்து உள்ளது. ஆனால்...
திறமையான கலைஞன் மறைந்து விட்டார்: சுசாந்த் சிங் பற்றி உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து

திறமையான கலைஞனான சுசாந்த் சிங் அசாதாரணமான சூழலில் மரணமடைந்து விட்டார் என உச்ச நீதிமன்ற நீதிபதி ராய் கருத்து தெரிவித்துள்ளார். 

கிரிக்கெட் வீரா் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனி வேடத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இளம் பாலிவுட் நடிகா் சுசாந்த் சிங் ராஜ்புத் (34), கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டாா். அவரது மரணம் நாடு முழுவதும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. மன அழுத்தம் காரணமாக அவா் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. 

சுசாந்தின் நெருங்கிய தோழியான நடிகை ரியா சக்ரபோர்தி, சுசாந்த் சிங்கின் மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் சமீபத்தில் கோரிக்கை வைத்தார். 

நடிகை ரியா மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது பாட்னா காவல்துறையில் சுசாந்த் சிங்கின் தந்தை கே.கே. சிங் புகார் அளித்துள்ளார். சுசாந்திடம் நிதி மோசடியில் ஈடுபட்டு மன ரீதியாகத் துன்புறுத்தியதாகப் புகாரில் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரியா மீது தற்கொலைக்குத் தூண்டியது, நம்பிக்கைத் துரோகம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக மத்திய மண்டல ஐ.ஜி. சஞ்சய் குமார் சிங் தெரிவித்துள்ளார். 

சுசாந்த் சிங்கின் தந்தை கே.கே. சிங் புகாரில் கூறியுள்ளதாவது: சுசாந்த் சிங்குக்குச் சொந்தமான ரூ. 1.5 கோடி அவருக்குத் தொடர்பில்லாத வேறொரு வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது. சுசாந்திடமிருந்த லேப்டாப், பணம், நகைகள், கிரெடிட் கார்டுகள் போன்றவற்றை ரியாவும் அவருடைய குடும்பத்தினரும் திருடி விட்டார்கள். மேலும் சுசாந்தின் மருத்துவ அறிக்கைகளை வெளியில் சொல்வதாக மிரட்டியுள்ளார்கள் என்று தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து பாட்னா காவல்துறை பதிந்துள்ள வழக்கை மும்பைக்கு மாற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் நடிகை ரியா மனு செய்துள்ளார். சுசாந்த் சிங் தந்தை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தங்கள் தரப்புப் பதிலைக் கேட்காமல் உத்தரவு எதுவும் பிறப்பிக்கக் கூடாது எனக் கோரி கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சுசாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடா்பான வழக்கு விசாரணையை சிபிஐக்குப் பரிந்துரைக்க முடிவு செய்துள்ளதாக பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தெரிவித்தாா்.

சுசாந்தின் தந்தை கிருஷ்ணகுமாா் சிங்கின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவை மேற்கொண்டதாக அவா் கூறினாா். சுசாந்த் மரண வழக்கை மும்பை காவல்துறை விசாரித்து வருகிறது. இந்நிலையில், சுசாந்தை தற்கொலைக்குத் தூண்டியதாக அவரது தந்தை, நடிகை ரியாவுக்கு எதிராக அளித்த புகாரை பாட்னா காவல்துறை விசாரித்து வருகிறது. இதனிடையே, சுசாந்த் சிங் மரண வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கும் விவகாரம் பிகாா் மாநில சட்டப்பேரவையில் எதிரொலித்த நிலையில், இத்தகைய முடிவை பிகார் மாநில அரசு மேற்கொண்டுள்ளது.

பிகாா் மாநிலத்தில் விசாரிக்கப்படும் வழக்கை மும்பைக்கு மாற்றக் கோரி சுசாந்த் சிங்கின் காதலி ரியா உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சுசாந்த் சிங் மரணம் தொடா்பான வழக்கு விசாரணையை சிபிஐக்குப் பரிந்துரைக்க பிகார் அரசு முடிவு செய்ததை ஏற்றுக்கொள்வதாக மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விசாரணையின்போது உச்ச நீதிமன்ற நீதிபதி ரிஷிகேஷ் ராய் கூறியதாவது: இந்த மரணம் ஏற்பட்டது துரதிர்ஷ்டவசமானது. திறமையான கலைஞன் அசாதாரணமான சூழலில் மரணமடைந்து விட்டார். எந்தச் சூழ்நிலை காரணமாக இந்த மரணம் நிகழ்ந்தது என்பதை விசாரிக்க வேண்டும். இந்த மரணம் பற்றி எல்லோருக்கும் கருத்து உள்ளது. ஆனால், சட்டத்தின்படியே இந்த வழக்கை விசாரிக்க முடியும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com