பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
நாட்டில் கரோனா பரவல் தொடர்ந்து தீவிரமாகப் பரவி வரும் சூழ்நிலையில், அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் பலரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய், இயக்குநர் ராஜமவுலி என சினிமா பிரபலங்களும், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, தர்மேந்திர பிரதான், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பல்வேறு மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என தொற்று பரவல் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு இருமல் மற்றும் காய்ச்சல் இருந்ததையடுத்து அவர் தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். பின்னர் பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு லேசான கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.
வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகவும், ஆனால், தற்போதைய சூழ்நிலையில் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெறுவதே நல்லது என்பதால், மருத்துவமனையில் இருப்பதாகவும் அவர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், தான் நலமாக இருப்பதாவும், செய்தியறிந்து தன்னை நலம் விசாரித்த அனைவரும் நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.