கடந்த காலத்தில் ஒரு நாள் திரும்பக் கிடைத்தால் என்ன கேட்பீர்கள் என்கிற கேள்வியை ரசிகர்களிடம் கேட்டு அதற்குப் பதில் அளித்துள்ளார் இயக்குநர் செல்வராகவன்.
ட்விட்டரில் அவர் எழுதியதாவது:
நண்பர்களுடன் மாலை முழுதும் அரட்டை அடித்து, விளையாடி, தூரத்தில் அப்பா நிழல் பார்த்து, வீட்டிற்கு ஓடி, அம்மா வைத்ததைச் சாப்பிட்டு, எந்தக் கவலையும் இல்லாது தூங்கிப் போன பொழுதை கேட்பேன்.
அல்லது... காலை முதல் தெரு ஓரம் காத்திருந்து அவள் என்னைக் கடந்து போகையில் உரசும் விழிகளின் தாக்கம் கேட்பேன் என்று எழுதியுள்ளார்.
செல்வராகவன் அடுத்ததாக தனுஷ் நடிப்பில் புதுப்பேட்டை 2 படத்தை இயக்கவுள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா நடித்த நெஞ்சம் மறப்பதில்லை படம், 2017-ல் வெளியாக வேண்டியது. தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்ற பின்பும் இன்றுவரை வெளியாகவில்லை. இதன்பிறகு சந்தானம் நடிப்பில் மன்னவன் வந்தானடி படத்தை இயக்கினார் செல்வராகவன். அதுவும் வெளிவரவில்லை.