திரையுலகில் நடிக்க வந்த புதிதில் தன்னை ராசியில்லாத நடிகை என முத்திரை குத்தியதாக வித்யா பாலன் கூறியுள்ளார்.
ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:
மோகன் லாலுடன் என்னுடைய முதல் படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது முதல் பகுதிப் படப்பிடிப்பு முடிந்தபோது ஏழெட்டு பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அந்தப் படம் அதோடு நின்றுபோனது. என்னுடைய முதல் படம் நின்று போனதோடு மட்டுமல்லாமல் இதர வாய்ப்புகளும் என்னை விட்டு நழுவிச் சென்றன. ராசியில்லாத நடிகை என முத்திரை குத்தினார்கள்.
எனக்கு இதில் நம்பிக்கையில்லை. வெற்றியோ தோல்வியோ ஒருவரை மட்டும் காரணமாகச் சொல்ல முடியாது. சில நேரங்களில் சில விஷயங்கள் நடக்காது. எல்லாப் படங்களில் இருந்தும் என்னை நீக்கியபோது நான் மனம் உடைந்தேன். ஒரு பெரிய தமிழ்ப் படத்திலிருந்தும் என்னை நீக்கினார்கள். என்ன நடக்கிறது என்று புரியாமல் இருந்தேன். பிறகு பிரதீப் சர்கார் எனக்கு அளித்த வாய்ப்புகள் தான் திருப்புமுனையாக அமைந்தன என்றார்.
தமிழ்ப் பெண்ணான வித்யா பாலன், கடந்த வருடம் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். 2003-ல் பாலோ தேகோ என்கிற வங்காளிப் படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமாகி தற்போது பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஒருவராக உள்ளார்.