பிரபல தயாரிப்பாளர் சுவாமிநாதன் மறைவுக்கு நடிகர் சிம்பு இரங்கல் தெரிவித்துள்ளார்.
கோகுலத்தில் சீதை, பிரியமுடன், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், உன்னை நினைத்து, பகவதி, அன்பே சிவம், புதுப்பேட்டை உள்ளிட்ட பல படங்களை 90கள் முதல் தயாரித்து வருகிறது லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் திரைப்பட நிறுவனம். இந்நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவர் வி. சுவாமிநாதன். சில படங்களில் குணச்சித்திரை வேடங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றால் சுவாமிநாதன் சமீபத்தில் பாதிக்கப்பட்டார். இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுவாமிநாதன் சிகிச்சை பலனின்றி காலமானார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் சுவாமிநாதன் மறைவுக்கு நடிகர் சிம்பு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
தயாரிப்பாளர் சுவாமிநாதன் எனக்கு மிக நெருக்கமானவர். மென்மையான மனிதர். புத்திசாலி. எந்த நேரத்தில் யாரை வைத்து என்ன மாதிரி படம் பண்ண வேண்டும் என்பதில் தெளிவானவர். நட்புக்கு இலக்கணமானவர். சிலம்பாட்டம் படக் களத்தில் என்னைப் பத்திரமாகப் பார்த்துக் கொண்டவர். இலங்கையில் படப்பிடிப்பு நடைபெற்றது. எனது தேவைகளை அறிந்து சகோதரனைப் போல் நடத்திப் படப்பிடிப்பையும் முடித்து வந்தார்.
நிறைய நினைவலைகள் உள்ளன. ஆனால், இப்படி சில நாள்களில் விடைபெற்றுச் செல்வாரெனத் தெரியாது. மருத்துவமனை சென்று பார்த்து ஆறுதல் கூட சொல்லமுடியாத ஒரு நோயோடு போராடியிருக்கிறார் என்பது வேதனைக்குரியது. அஸ்வின் மற்றும் அசோக் அவர்களுக்கு என்றும் எந்தக் காலத்திலும் நாங்கள் உறுதுணையாக இருப்போம். குடும்பத்தின் மீது அக்கறை கொண்ட ஒரு அமைதியான மனிதரை இழந்திருப்பதில் வருத்தமடைகிறேன்.
அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் சுற்றத்திற்கும் திரையுலகினருக்கும் என் ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மரணமடைந்த அவரின் ஆன்மா இறைவன் மடியில் இளைப்பாறட்டும் என வேண்டிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.