நடிகை மீரா மிதுனின் தூண்டுதலின் பேரில் தனக்குப் பலரும் கொலை மிரட்டல் விடுப்பதாக சென்னைக் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடிகை ஷாலு புகார் அளித்துள்ளார்.
கடந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் புகழை அடைந்த மீரா மிதுன் - 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி என மூன்று படங்களில் நடித்துள்ளார்.
ட்விட்டரில் நடிகர்கள் விஜய், சூர்யாவைப் பற்றி சமீபத்தில் அவர் கூறிய கருத்துகளுக்கு ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா குறித்து தவறாகப் பேசியதாக நடிகை மீரா மிதுன் மீது பட்டுக்கோட்டை விஜய் மக்கள் இயக்கத்தினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்கள்.
நடிகர்கள் விஜய், சூர்யாவைப் பற்றி தவறாகப் பேசி வரும் நடிகை மீரா மிதுனுக்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
விஜய், சூர்யாவுக்கு ஆதரவாகவும் மீரா மிதுனுக்குப் பதில் அளிக்கும் விதமாகவும் ட்விட்டரில் விடியோ வெளியிட்டிருந்தார் நடிகை ஷாலு. இந்நிலையில் நடிகை மீரா மிதுனின் தூண்டுதலின் பேரில் தனக்குப் பலரும் கொலை மிரட்டல் விடுப்பதாக சென்னைக் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது:
மீரா மிதுனின் தூண்டுதலின் பேரில் பல செயலிகளில் என்னுடைய புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்து பல அவதூறு செய்திகளைப் பரப்பி வருகிறார்கள்.
மேலும் மீரா மிதுனின் தூண்டுதலின் பேரில் அவருடைய ஆதரவாளர்கள் செல்போன் மற்றும் சமூகவலைத்தளங்கள் வழியாக கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். எனவே மீரா மிதுன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.