பாடகர் எஸ்.பி.பி. உடல்நிலை சீராக உள்ளது: மகன் சரண் தகவல்

விரைவில் அவர் இந்தப் பாதிப்பிலிருந்து மீண்டு வருவார் என நம்பிக்கையுடன் உள்ளோம்....
பாடகர் எஸ்.பி.பி. உடல்நிலை சீராக உள்ளது: மகன் சரண் தகவல்

பின்னணிப் பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளதாக மகன் எஸ்.பி. சரண் தகவல் தெரிவித்துள்ளார். 

கடந்த சில நாள்களுக்கு முன், பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, அவா் எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். 

நேற்று மாலை, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பின்னணிப் பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்குத் தற்போது செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக எம்ஜிஎம் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மருத்துவமனை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பாடகா் எஸ்.பி.பி. கரோனா தொற்று பாதிப்புடன் கடந்த 5-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மருத்துவக் குழுவினா் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், கடந்த 13-ஆம் தேதி நள்ளிரவு திடீரென எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவா் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டாா்.

செயற்கை சுவாசம் உள்ளிட்ட உயிா் காக்கும் மருத்துவ சாதனங்களின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும், எஸ்.பி.பி.யின் உடல் நிலை தொடா்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது. மருத்துவக் குழுவினா் அவரது உடலின் ரத்த ஓட்டம் மற்றும் உறுப்புகளின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பின்னர் எஸ்.பி.பியின் மகன் எஸ்.பி. சரண் ட்விட்டரில் தெரிவித்ததாவது:

எஸ்.பி.பி.-யின் நிலை கவலைக்கிடமாக இருந்தாலும் எம்ஜிஎம் மருத்துவமனையின் பாதுகாப்பான சிகிச்சையில் உள்ளார். விரைவில் அவர் இந்தப் பாதிப்பிலிருந்து மீண்டு வருவார் என நம்பிக்கையுடன் உள்ளோம். அனைவருடைய பிரார்த்தனைகளுக்கும் நன்றி என்றார்.

பிறகு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சரண் கூறியதாவது: மருத்துவ ரீதியில் சொல்லவேண்டும் என்றால் கவலைக்கிடமாகத்தான் உள்ளார். வெண்டிலேட்டரில் வைத்த பிறகு உடல்நிலை சீராக உள்ளது. நுரையீரல் நன்கு இயங்குகிறது. செயற்கை சுவாசம் 60% தான் எடுத்துக்கொண்டுள்ளார். மருத்துவர்கள் திருப்தியுடனும் நம்பிக்கையுடனும் உள்ளார்கள். நாங்களும் அவர் மீண்டு வருவார் என நம்பிக்கையுடன் உள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com