நடிகை சாரா அலி கானுடனான சுசாந்த் சிங்கின் காதல்: விவரிக்கும் நண்பர்

சுசாந்த் சிங்கும் சாரா அலி கானும் காதலில் திளைத்திருந்தார்கள்...
நடிகை சாரா அலி கானுடனான சுசாந்த் சிங்கின் காதல்: விவரிக்கும் நண்பர்

நடிகை சாரா அலி கானை சுசாந்த் சிங் காதலித்தது குறித்து அவருடைய நண்பர் சாமுவேல் பதிவு எழுதியுள்ளார்.

நடிகா் சுசாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி மும்பையில் தற்கொலை செய்து கொண்டாா். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக நடிகை ரியா மீது சுசாந்த் சிங்கின் தந்தை கிருஷ்ண கிஷோா் சிங், பாட்னா காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் ரியா உள்ளிட்ட 7 போ் சுசாந்த் சிங் ராஜ்புத்தை தற்கொலை செய்யத் தூண்டியதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

அத்தகவல் அறிக்கையை சிபிஐக்கு மாற்ற மத்திய அரசுக்கு பிகாா் அரசு பரிந்துரைத்திருந்தது. அதை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டது. இதனிடையே, இந்த வழக்கு தொடா்பான விசாரணையை பாட்னா காவல் துறையிடமிருந்து மும்பை காவல் துறைக்கு மாற்றி உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் ரியா வழக்கு தொடுத்தாா். அந்த வழக்கு மீதான விசாரணை, நீதிபதி ரிஷிகேஷ் தலைமையிலான அமா்வு முன் நடைபெற்று வந்தது. அந்த வழக்கின் தீா்ப்பை நீதிபதிகள் புதன்கிழமை வழங்கினா். அப்போது அவா்கள் கூறுகையில், ‘இந்த வழக்கை விசாரிப்பதற்கு மும்பை காவல் துறையினரிடம் குறைந்த அளவிலான அதிகாரமே உள்ளது. வழக்கை சிபிஐ விசாரிப்பதே சரியாக இருக்கும். முதல் தகவல் அறிக்கையை சிபிஐக்கு மாற்றுவதற்கான அதிகாரம் பிகாா் அரசுக்கு உள்ளது. சுசாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை தொடா்பாக பதியப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் சிபிஐக்கு மாற்ற வேண்டும். மும்பை திரையுலகில் சுசாந்த் மிகச் சிறந்த நடிகராகத் திகழ்ந்தாா். அவரின் தற்கொலை தொடா்பான நியாயமான விசாரணையை குடும்பத்தினா், நண்பா்கள், ரசிகா்கள் என அனைவரும் எதிா்நோக்கியுள்ளனா். இந்த வழக்கின் விசாரணையை வெளிப்படைத்தன்மையுடன் நோ்மையாக நடத்த வேண்டியது அவசியமாக உள்ளது’ என்றனா்.

2018-ல் நடிகை சாரா அலி கான், சுசாந்த் சிங்குக்கு ஜோடியாக கெதர்நாத் படத்தில் அறிமுகமானார். சாரா, நடிகர் சயிப் அலி கான் - அம்ரிதா சிங்கின் மகள். பிறகு அம்ரிதா சிங்கை 2004-ல் விவகாரத்து செய்துவிட்டு 2012-ல் நடிகை கரீனா கபூரை சயிப் அலி கான் திருமணம் செய்துகொண்டார்.  

இந்நிலையில் நடிகை சாரா அலி கானுடனான சுசாந்த் சிங்கின் காதல் குறித்து அவருடைய நண்பர் சாமுவேல் இன்ஸ்டகிராமில் எழுதியுள்ளதாவது:

கெதர்நாத் பட விளம்பர நிகழ்ச்சிகளில் சுசாந்த் சிங்கும் சாரா அலி கானும் காதலில் திளைத்திருந்தார்கள். இது எனக்கு இன்னும் ஞாபகம் உள்ளது. அவர்கள் பிரிக்க முடியாதவர்களாக இருந்தார்கள். இருவரும் ஒருவர் மீது அதிக மரியாதை வைத்திருந்தார்கள். இதை இக்கால காதல்களில் பார்ப்பது அரிது. சுசாந்தின் குடும்பம், நண்பர்கள், பணியாளர்கள் என அனைவர் மீதும் சுசாந்தும் சாராவும் மரியாதை செலுத்தினார்கள். சோன்சிரியா படம் தோல்வியடைந்தபிறகு சுசாந்துடனான காதலை சாரா அலி கான் முறித்துக்கொண்டார். இதற்கு பாலிவுட் மாபியா காரணமாக இருக்குமோ எனச் சந்தேகிக்கிறேன் என்று எழுதியுள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com