செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் பல்வேறு தளா்வுகளை அளித்து தமிழக முதல்வா் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திரைப்படத் தொழிலுக்கான படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு, ஒரே நேரத்தில் 75 பேருக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. படப்பிடிப்பின் போது, பாா்வையாளா்களுக்கு அனுமதி கிடையாது என்று அறிவித்துள்ளார்.
இந்நிலையில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து இயக்குநர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
இப்போதும் கரோனாவின் பரவல் சூழலில் தமிழக அரசு நினைத்திருந்தால் நாங்கள் படப்பிடிப்புக்குச் செல்வதை முடக்கியே வைத்திருக்கலாம். ஆனால் அரசு கொடுத்த வழிமுறைகளைப் பின்பற்றி முழுமையாகச் செயல்படுவோம் என்ற எங்களின் உறுதிமொழியையும் பட்டினியால் வாடுவோர்களையும் கருத்தில் கொண்டு படப்பிடிப்புக்கு அனுமதி அளித்ததை நன்றியோடு பார்க்கிறோம். முதல்வருக்கும் அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கும் நன்றிகள் பல.
இன்னும் சில வரைமுறைகளோடு எங்கள் திரையரங்குகளையும் இயங்க ஆவன செய்வீர்கள் எனக் காத்திருக்கிறோம். பிற்சேர்க்கைப் பணி செய்தாலும் படப்பிடிப்புத் தளம் சென்றாலும் நாங்கள் உண்மையாகவே மீளும் நாள் திரையரங்கங்கள் திறக்கும் நாள் தான் என்றார்.