திருப்பூர்: நடிகர் விஜய் நடித்துள்ள "மாஸ்டர்' திரைப்படம் வரும் ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் உள்ள ஸ்ரீ சக்தி திரையரங்கில் செய்தியாளர்கள் சந்திப்பு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் திருப்பூர் சுப்பிரமணியம், தமிழ்நாடு ஆக்டிவ் பிலிம் டிஸ்டிரிபியூட்டர்ஸ் அசோசியேஷன் செயலாளர் கே.ராஜமன்னார் ஆகியோர் கூறியதாவது:
நடிகர் விஜய் நடித்த "மாஸ்டர்' திரைப்படம் தைப் பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி 13 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகர் விஜய் நடித்துள்ள படங்கள் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில்தான் வெளியாகி வந்தன. ஆனால் தற்போது "மாஸ்டர்' திரைப்படம் முதல்முறையாக ஹிந்தியிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படுகிறது.
தமிழகத்தில் வரும் ஜனவரி 1 முதல் திரையங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு தமிழக முதல்வர் அனுமதி அளிக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அவ்வாறு அனுமதி அளித்தால் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து திரையங்குகள் செயல்படும். தமிழ் திரைப்பட நடிகர்களின் படங்கள் திரையரங்குகளுக்குச் சென்று 8 வாரங்களுக்குப் பின்னர்தான் ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் நடிகர்கள் ஒப்பந்தம் செய்ய வேண்டும். அப்போதுதான் தமிழ் சினிமா அடுத்த தளத்துக்குச் செல்லும். சினிமா தொழில்தான் நடிகர்கள், இயக்குநர்கள், திரையரங்க உரிமையாளர்களின் வளர்ச்சிக்கு உதவியது. ஆகவே, இந்தத் தொழிலைப் பாதுகாக்க அனைத்து நடிகர்களும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றனர்.