நெற்றிக்கண் பட உரிமை யாருக்கும் வழங்கப்படவில்லை: விசுவின் குற்றச்சாட்டுகளுக்கு கவிதாலயா விளக்கம்!

விசு முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் எந்தவிதமான ஒரு அடிப்படை ஆதாரமும் முகாந்திரமும் கிடையாது.
நெற்றிக்கண் பட உரிமை யாருக்கும் வழங்கப்படவில்லை: விசுவின் குற்றச்சாட்டுகளுக்கு கவிதாலயா விளக்கம்!

1981-ல் ரஜினி நடிப்பில் வெளியான படம் - நெற்றிக்கண். இந்தப் படத்தை தனுஷ் ரீமேக் செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியானதையடுத்து மூத்த நடிகரும் இயக்குநருமான விசு, கதை உரிமை குறித்து விடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

ரஜினி நடித்த நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்ய தனுஷ் திட்டமிட்டுள்ளதாக எனக்கு ஒரு செய்தி வந்தது. பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி, தெரிந்தோ தெரியாமலோ சில காரியங்களைச் செய்கிறார். நெகடிவ் உரிமை தன்னிடம் இருந்தால் கதை உரிமையையும் விற்கிறார்கள். கவிதாலயாவில் என் சம்பந்தப்பட்ட படங்கள் வேற்று மொழிகளுக்கு விற்கபட்டபோதும் என்னிடம் அனுமதி பெறவில்லை. பாலசந்தருக்காக வாயை மூடிக்கொண்டிருந்தேன். ஒருவேளை எல்லா உரிமைகளையும் நான் கவிதாலயாவுக்கு அளித்திருந்தால் அந்த ஆதாரத்தை புஷ்பா கந்தசாமி என்னிடம் காட்டவேண்டும். அப்படிச் செய்தால் நான் மன்னிப்பு கேட்கத் தயாராக உள்ளேன். கதை அதிகாரம் எழுத்தாளரிடம் தான் உள்ளது. தயாரிப்பாளரிடம் நெகடிவ் உரிமை இருந்தால் மட்டும் போதாது. அப்படி எல்லா உரிமைகளையும் அளித்தாலும் விற்கும்போது எழுத்தாளரின் சம்மதமும் வேண்டும். தனுஷ், நீங்கள் படம் ஆரம்பித்த பிறகு நான் வழக்கு தொடுத்தால் நீங்கள் வருத்தப்படக்கூடாது. அதனால் தான் இப்போதே சொல்லிவிடுகிறேன். அதிகாரபூர்வமாக அனுமதி பெற்றுக்கொண்டு நெற்றிக்கண் படத்தை நீங்கள் எடுக்கவேண்டும் என்று இப்போதும் கூறிக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் நெற்றிக்கண் மற்றும் தில்லுமுல்லு படங்களின் கதை உரிமை தொடர்பான சர்ச்சைகளுக்கு கவிதாலயா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கவிதாலயாவின் நெற்றிக்கண், தில்லுமுல்லு - திரைப்பட தமிழ் ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை. கவிதாலயா, நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் திரைப்படத்துறையில், பல்வேறு மொழிகளில் திரைப்படத் தயாரிப்புத்துறையில்  வெற்றிகரமாக இயங்கி வரும் ஒரு முன்னணி நிறுவனம். தமிழ்த் திரையுலக ஜாம்பவான் கே பாலசந்தர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம், ஆரம்பம் முதலே திரைப்படக் காப்புரிமை குறித்து மிகுந்த கவனமும் அக்கறையும் கொண்டு செயல்பட்டு வருகிறது. ஆகையால், ஒருபோதும் இந்நிறுவனம் விதிமீறல்களுக்கு எந்த விதத்திலும் இடம் அளித்ததில்லை. மேலும், கவிதாலயா எழுத்தாளர்களின் பங்கையும், முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்திருப்பதால், அவர்களை மிகுந்த மரியாதையுடனேயே எப்போதும் நடத்தி வந்திருக்கிறது.

இந்நிலையில் ‘நெற்றிக்கண்’ திரைப்படம் குறித்து உண்மைக்கு புறம்பான, மனவருத்தம் அளிக்கக்கூடிய தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக அறிகிறோம். அதுகுறித்து தெளிவுபடுத்தவே இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தின் முழு காப்புரிமையும் அப்படத்தின் தயாரிப்பாளர் என்கிற முறையில், கவிதாலயா வசமே இருக்கிறது. அதன் தமிழ் ரீமேக் உரிமையைக் கேட்டு, யாரும் இதுவரை எங்களை அணுகவும் இல்லை. நாங்களும் யாருக்கும் கொடுக்கவும் இல்லை. 

இந்நிலையில் விசு, கதாசிரியர் என்கிற முறையில் தனக்கு உரிய ஊதியத்தைத் தரவில்லை எனக் கூறுவது அடிப்படை ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டு. அவ்வாறு, ரீமேக் உரிமை விற்கப்படுமேயானால், சம்பந்தப்பட்டவர்களின் உரிமைகளை மனதில் கொண்டே கவிதாலயா செயல்படும். செயல்பட்டும் வந்திருக்கிறது.

மேலும், கவிதாலயாவிற்கும் அதன் நிர்வாகிகளுக்கும் எதிராக ‘தில்லுமுல்லு’ திரைப்படம் தொடர்பாக விசு முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் எந்தவிதமான ஒரு அடிப்படை ஆதாரமும் முகாந்திரமும் கிடையாது. இது சம்பந்தமாக, அவர் தொடர்ந்த வழக்கில் கவிதாலயாவும் அதன் நிர்வாகிகளும் சம்பந்தப்படவில்லை என்பதையும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆக, கவிதாலயாவும் மற்றும் அதன் நிர்வாகிகளும் ஒப்பந்த மீறல்களுக்கும் விதிமீறல்களுக்கும் ஒருபோதும் துணை நின்றதில்லை என்பதை இதன்மூலம் வலியுறுத்திக் கூறுவதோடு அனைத்துத் தரப்பினருக்கும் இதன் மூலம் தெளிவுபடுத்துகிறோம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com