இந்தியன் 2 விபத்து குறித்து ரகுல் ப்ரீத் சிங் வேதனை டிவீட்

கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் இரங்கல் தெரிவித்துள்ளனர்
இந்தியன் 2 விபத்து குறித்து ரகுல் ப்ரீத் சிங் வேதனை டிவீட்

1996-ல் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் படம் பெரிய வெற்றியடைந்தது. இப்படத்தின் 2-ம் பாகம் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. கமல், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், வித்யுத் ஜமால், ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரியா பவானி சங்கர் போன்றோர் இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்கள். இசை - அனிருத், ஒளிப்பதிவு - ரத்னவேலு.

இந்நிலையில் நேற்றைய படப்பிடிப்பின்போது ராட்சத கிரேன் திடீரென சரிந்து விழுந்தது. இதில் ஷங்கரின் உதவியாளர் கிருஷ்ணா, மது, சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்கள். படப்பிடிப்புத் தளத்தில் இருந்த ஒரு பெண் உள்பட 9 பேர் காயமடைந்தார்கள். உடனே அவர்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் ட்வீட் செய்து தங்களுடைய இரங்கல் தெரிவித்துள்ளனர்.  

கமல் இது தொடா்பாக சுட்டுரையில், ''எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன். எனது வலியை விட அவா்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவா்களில் ஒருவனாக அவா்களின் துயரத்தில் பங்கேற்கிறேன். அவா்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.  

மேலும் அவர் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களைப் பற்றிக் கூறுகையில், "மருத்துவமனையில் விபத்துக்குள்ளானவர்களைக் கவனிக்கும் மருத்துவர்களிடம் நான் பேசியுள்ளேன். முதலுதவி அளிக்கப்பட்டு தகுந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்ற நம்பிக்கையுடன் இன்றிரவு விடியட்டும்" என்று அவர் கூறினார்.

காஜல் ட்வீட் செய்ததாவது: "நேற்றிரவு முதல் என் சகாக்களின் எதிர்பாராத, அகால இழப்பினால் நான் உணரும் மன வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. கிருஷ்ணா, சந்திரன் மற்றும் மது. உங்கள் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். இந்தத் தருணத்தில் கடவுள் உங்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டுகிறேன்.# இந்தியன் 2.

மேலும் அவர் கூறியதாவது: "என்னுடன் பணிபுரிந்த 3 பேரை இழந்ததைக் கண்டு மனவேதனை அடைகிறேன். அவர்களுடைய குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கல்கள். மயிரிழையில் உயிர் பிழைத்து, இந்த ட்வீட்டை டைப் செய்துவருகிறேன். அந்த ஒரு நொடி தான். நேரம் மற்றும் வாழ்க்கையின் மகத்துவம் குறித்து நிறைய கற்றுக்கொண்டேன். "

இச்சம்பவம் அறிந்து அதிர்ச்சியடைந்த ரகுல் ப்ரீத் சிங் டிவிட்டரில் கூறியது "எனது 'இந்தியன் 2' படத்தின் செட்டில் நடந்த விபத்து குறித்து கேள்விப்பட்டேன் ஈடு செய்ய முடியாத உயிர் இழப்பு இது, என்ன சொல்வதென்று கூட எனக்குத் தெரியவில்லை.. அந்தக் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள், மிகவும் வருத்தமாக இருக்கிறது. " என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 3 பேரின் உடல்களுக்கு கமல் அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்த உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். பிறகு செய்தியாளர்களிடம் கமல் பேசியதாவது:

''இது என் குடும்பத்தில் நடந்த விபத்தாகப் பார்க்கிறேன். ரூ. 200 கோடி, ரூ. 300 கோடி பட்ஜெட்டில் படம் எடுத்தாலும் தமிழ் சினிமாவில் கடைநிலை ஊழியர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க முடியாதது அவமானத்தை ஏற்படுத்துகிறது. நேற்றைய விபத்தில் மயிரிழையில் நானும் ஷங்கரும் இதர படக்குழுவினரும் இந்த விபத்திலிருந்து உயிர் பிழைத்துள்ளோம். விபத்தில் பலியான 3 பேரின் குடும்பத்துக்கு நிதியுதவியாக ரூ. 1 கோடி அளிக்கிறேன்'' என கமல் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com