இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து 3 பேர் இறந்தது தொடர்பாக முன்ஜாமீன் கோரி லைகா நிறுவனத் தயாரிப்பு மேலாளர் சுந்தர்ராஜன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநா் ஷங்கா் இயக்கத்தில், நடிகா் கமல்ஹாசன், நடிகை காஜல் அகா்வால் நடிப்பில் ‘இந்தியன் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் திரைப்பட நகரத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 20-ஆம் தேதி இரவு அந்த திரைப்படப் பிடிப்புக்காக அதிக எடையுடைய மின்விளக்குகளுடன் நிறுத்தப்பட்டிருந்த உயரமான கிரேன், திடீரென சரிந்து விழுந்தது. இதில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த 13 போ் பலத்தக் காயமடைந்தனா். பலத்த காயமடைந்த உதவி இயக்குநா் சென்னை அபிராமபுரம் சுந்தர்ராஜன் தெருவைச் சோ்ந்த சி.ஸ்ரீகிருஷ்ணா, திரைப்பட தொழில்நுட்ப பணியாளா்கள் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த சொ.சந்திரன், ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம் கண்ணகிரியைச் சோ்ந்த சி.மது ஆகியோா் அடுத்தடுத்து உயிரிழந்தனா்.
இச்சம்பவம் தொடா்பாக நசரத்பேட்டை போலீஸாா், லைகா நிறுவனம், தயாரிப்பு மேலாளா், கிரேன் உரிமையாளா் கிரேன் ஆபரேட்டா் ராஜன் ஆகியோா் மீது மரணத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்டது, அஜாக்கிரதையாக செயல்பட்டது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். தலைமறைவாக இருந்த கிரேன் ஆபரேட்டா் ராஜனை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி விசாரணையை மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றி சென்னை பெருநகரகாவல்துறை ஆணையா் ஏ.கே.விசுவநாதன் உத்தரவிட்டாா்.
இந்நிலையில் இந்தியன் 2 விபத்து தொடர்பாக முன்ஜாமீன் கோரி லைகா நிறுவனத் தயாரிப்பு மேலாளர் சுந்தர்ராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். தனக்கும் விபத்துக்கும் தொடர்பில்லை என தனது மனுவில் தெரிவித்துள்ளார். முன்ஜாமீன் மீதான விசாரணையை மார்ச் 2-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.