மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் மலையாள படங்களில் ஒன்று ‘குறூப்’. கேரளத்தில் பிரபல குற்றவாளியாக எண்பதுகளில் வலம் வந்த சுகுமார குறூப்பின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தை ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்குகிறார். இப்படத்தின் கதையை ஜிதின் கே ஜோஸ் எழுதியுள்ளார். கே.எஸ்.அரவிந்த் மற்றும் டேனியல் சயூஜ் நாயர் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர்.
இந்தப் படத்தில் குறூப் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார். இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன்தான் துல்கர் சல்மானை முதன்முதலில் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகியாக பாலிவுட் நடிகை சோபிதா துலிபாலா நடிக்கிறார். மூத்தோன் திரைப்படத்தை அடுத்து சோபிதா துலிபாலாவுக்கு இது இரண்டாவது மலையாளம் படம். இப்படத்தில் இந்திரஜித் சுகுமாரன், டோவினோ தாமஸ், சன்னி வெய்ன், ஷைனி டாம் சாக்கோ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்திரஜித் சுகுமாரன் குறூப்பைத் தேடும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்தப் படத்துக்காக துல்கர் சல்மான் விதவிதமான கெட்டப்பில் நடித்துள்ளார்.
கேரள ரெளடியான சுகுமார குறூப் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு போலீஸார் தேடியதால், எங்கோ தப்பிவிட்டதாக கூறப்பட்டது. அவனைப் பற்றி ஐந்து ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து குறூப் படத்தின் கதையை உருவாக்கியிருக்கி உள்ளார் இயக்குநர் ஸ்ரீநாத் ராஜேந்திரன்.
சுஷின் ஷியாம் இசையமைக்க்க, ‘லூகா’ படப்புகழ் நிமிஷா ரவி கேமராவைக் கையாள்கிறார். தேசிய விருது வென்றவர்களான விவேக் ஹர்ஷன் மற்றும் வினேஷ் பங்களன் (கலை இயக்குனர்) ஆகியோரும் படத்தில் பணியாற்றுகின்றனர்.
துல்கர் சல்மானின் சொந்த பேனர், வேஃபாரர் ஃபிலிம்ஸ் மற்றும் எம் ஸ்டார்ஸ் ஆகியோரால் ‘குறூப்’ தயாரிக்கப்படுகிறது. 2020-ஆம் ஆண்டு கிறுஸ்துமஸ் தினத்தில் இப்படம் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.