மணி ரத்னம் தற்போது இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்து பாடல்களை எழுதவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் ரோஜா படத்தில் ஆரம்பித்த மணி ரத்னம் - ஏ.ஆர். ரஹ்மான் - வைரமுத்து கூட்டணி முதல்முறையாகப் பிரிந்துள்ளதாக அறியப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை, படத்தைத் தயாரிக்கும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. பாடலாசிரியர் பெயர் இல்லாத படக்குழுப் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
தனியார் தொலைக்காட்சிக்கு ஏ.ஆர். ரஹ்மான் அளித்த ஒரு பேட்டியில் பொன்னியின் செல்வன் - வைரமுத்து விவகாரம் குறித்துப் பேசியதாவது: பொன்னியின் செல்வன் படத்தில் யார் பாடல்கள் எழுதுகிறார்கள் என்பதைப் பற்றி நீங்களே தெரிந்துகொள்வீர்கள். இப்போது எதுவும் சொல்ல முடியாது. இதுகுறித்து எதுவாக இருந்தாலும் மணி ரத்னம் அலுவலகத்திலிருந்து தெரிவிக்கப்படும் என்றார்.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்து பாடல்கள் எழுதவில்லை என்று வெளியான செய்திகளுக்குத் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான். ட்விட்டரில் அவர் கூறியுள்ளதாவது:
பொன்னியின் செல்வன்... இத்தருணத்தில் இப்படத்தில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் தீந்தமிழ் இல்லாது போனால் அப்பதிவு பெருமையும் பெறாது, முழுமையும் அடையாது என்று கூறியுள்ளார்.