பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிக் கவனம் பெற்ற இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் தனுஷ்.
கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப் படமும் தனது முதல் படம் போல முக்கியமான பிரச்னையைப் பேசும் என மாரி செல்வராஜ் கூறியுள்ளார். மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் பிரச்னை கடந்த சில வருடங்களுக்கு முன் பரபரப்பாக பேசப்பட்டது. போலீஸ் புகார், வழக்கு, கைது என பல்வேறு அதிர்ச்சி தரும் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அரசியல் கட்சிகளும் இப்பிரச்னையை முன்வைத்து போராட்டங்கள் நடத்தி உள்ளது. இந்த உண்மை சம்பவங்களை மையமாக வைத்து கர்ணன் கதை உருவாக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இப்படத்துக்கு கர்ணன் எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இத்தகவலை தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார். 'கர்ணன் அன்பு, இரக்கம் கருணை உள்ளவர் மட்டுமல்ல வெற்றியையும் தருபவர்! தொடர் படப்பிடிப்பில்...' என்று தன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்தப் படத்தின் தலைப்பை மாற்றக் கோரி நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவைத் தலைவர் கே.சந்திரசேகரன்தயாரிப்பாளர் தாணுவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் அவர் குறிப்பிட்டுள்ளது, ‘தங்கள் தயாரிப்பில் கர்ணன் என்ற பெயரில் திரைப்படம் உருவாவதாகப் படித்தேன். வருத்தம் அளிக்கிறது. நடிகர் திலகத்தின் மகாபாரதக் கர்ணன் திரைப்படம் பெயரை மீண்டும் பயன்படுத்துவது சரியல்ல. அதுவும் தங்களின் தயாரிப்பில் என்பது மிகுந்த வருத்தம். பெயரில் ஏதாவது இணைந்து வெளியிட்டால் நன்றாக இருக்கும். இது என்னுடைய கோரிக்கை மட்டுமல்ல. நடிகர் திலகம் ரசிகர்களின் ஏகோபித்த கோரிக்கை. ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன் என்று எழுதியுள்ளார்.
இது குறித்து தயாரிப்பாளர் தாணுவின் தரப்பிலிருந்து அதிகாரபூர்வமான பதில் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.