பிரபல நடிகை கங்கனா ரனாவத்தின் சகோதரி ரங்கோலி, விடியோ ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். ஹிந்தி திவஸ் (ஹிந்தி தினம்) தினத்துக்காக கங்கனா, விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
ஹிந்தி நம் தேசிய மொழி. ஆனால் அதைப் பேச நாடு மிகவும் யோசிக்கிறது. நம்பிக்கையுடன் ஏபிசிடி சொல்கிறார்கள். ஆனால் அதையே ஹிந்தியில் சொல்ல நம்பிக்கை வருவதில்லை. தங்கள் பிள்ளைகள் அற்புதமாக ஆங்கிலத்தில் பேசுவதாகப் பெருமையுடன் கூறுகிறார்கள் பெற்றோர்கள்.
தங்களுடைய ஆங்கிலம் பலவீனமாக இருந்தால் அதற்காக அவமானப்படுகிறார்கள். ஆனால் அதே நிலை ஹிந்தியில் இருந்தால் துளி வருத்தம் ஏற்படுவதில்லை.
திரையுலகம் என்னுடைய ஆங்கிலத்தைக் கண்டு கேலி செய்துள்ளது. விமரிசனம் செய்துள்ளது. ஆனால் ஹிந்திக்குத்தான் நான் முன்னுரிமை அளிக்கிறேன். இதன்மூலம் என்னால் பெரிய உயரத்தை அடைந்து வெற்றியை அடைய முடியும்.
பெற்றோர்களே, ஹிந்தியை உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லித் தாருங்கள். நாட்டு நெய் மூலம் உருவாக்கப்படும் பரோட்டாவில் உள்ள ருசி பீட்சா, பர்க்கரில் கிடைக்காது. மா (அம்மா)-வில் உள்ள அன்பு, மாம்-மில் கிடையாது என்று கூறியுள்ளார்.