சர்கார் படத்தையடுத்து ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். தயாரிப்பு - லைகா நிறுவனம். இது ரஜினியின் 167-வது படம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் கடந்த வியாழன் அன்று வெளியானது.
இந்நிலையில் தர்பார் படம் மதுரை கேபிள் சேனல் ஒன்றில் ஒளிபரப்பப்படுவதாக ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் புகார் தெரிவித்தார்கள். இந்த ட்வீட்டை முன்வைத்து பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், ட்விட்டரில் கூறியதாவது:
இது அக்கிரமம். பைரசி உச்சத்தில் உள்ளது. பெரும்செலவு செய்து எடுக்கப்பட்ட தர்பார் படம் கேபிள் சேனலில் ஒளிபரப்பப்படுகிறது. தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
தர்பார் படம் வாட்சப் மற்றும் சமூகவலைத்தளங்களில் பகிரப்படுவதைத் தடுக்கவேண்டும் என்று லைகா பட நிறுவனம் தரப்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த வாரம் புகார் அளிக்கப்பட்டது. தர்பார் படம் வாட்சப்களில் பகிரப்பட்டு வருகிறது. யாரும் திரையரங்குக்குச் செல்லக்கூடாது. இதனால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட வேண்டும் என்கிற தவறான எண்ணத்துடன் வாட்சப்களில் தர்பார் படம் பகிரப்பட்டு வருகிறது. இது சட்டப்படி தவறானது. இதனால் தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.