மறைந்த கவிஞர் நா.முத்துக்குமாரின் மகன் ஆதவன், பொங்கல் பண்டிகைக்காக எழுதிய கவிதைகள் சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான நா.முத்துக்குமார் (41) உடல் நலக்குறைவால் 2016 ஆகஸ்ட் 14 அன்று காலமானார். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இருந்த முத்துக்குமார் மருத்துவமனையில் அதற்குரிய சிகிச்சை எடுத்து வந்தார். எனினும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். கவிஞர் முத்துக்குமாருக்கு மனைவி தீபலஷ்மி, மகன் ஆதவன், மகள் யோகலஷ்மி ஆகியோர் உள்ளனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள முத்துக்குமார் அழகே அழகே (சைவம்), ஆனந்த யாழை (தங்க மீன்கள்) ஆகிய பாடல்களுக்காக இரு முறை பெற்றுள்ள தேசிய விருதுகள் பெற்றார்.
ஆதவன் எழுதியுள்ள பொங்கல் பண்டிகை கவிதைகள்
போகி
நீ உன் ஆணவத்தை அன்பில் எரி
இதை செய்பவனுக்கு வாழ்க்கை சரி
கோயிலில் இருக்கும் தேரு
பானையை செய்ய தேவை சேறு
வீட்டில் இருக்கும் வீண் பொருட்களை வெளியே போடு
இல்லையென்றால் வீடு ஆகிவிடும் காடு
தமிழரின் பெருமை மண் வாசனை
இந்த கவிதை என் யோசனை.
தைப் பொங்கல்
உழவர்களை அண்ணாந்து பாரு
உலகத்தில் அன்பை சேரு
அவர்களால் தான் நமக்கு கிடைக்கிறது சோறு
அவர்கள் இல்லையென்றால் சோற்றுக்கு பெரும் பாடு
உழவர்கள் நமது சொந்தம்
இதை சொன்னது தமிழர் பந்தம்
பொங்கல் இன்றும் என்றும் சொல்லும்
இவர்கள் இல்லையென்றால் கிடைக்காது நெல்லும்!
மாட்டுப் பொங்கல்
வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு
நீ உன் வேட்டியைத் தூக்கிக்கட்டு
கரும்பை இரண்டாக வெட்டு
நீ உன் துணிச்சலுக்கு கை தட்டு
சிப்பிக்குள் இருக்கும் முத்து
மாடு தமிழர்களின் சொத்து
மாடு எங்கள் சாமி
நீ உன் அன்பை இங்குக் காமி!
காணும் பொங்கல்
உறவினர்கள் வந்தார்களா என்று பாரு
உலகத்தில் நல்ல நண்பர்களை சேரு
நீ அழகாகக் கோலம் போடு
உன் நல்ல உள்ளத்தோடு
நீ உனக்குள் கடவுளைத் தேடு
இல்லையென்றால் நீ படுவாய் பாடு
பெண்ணைக் கண்ணாகப் பாரு
இல்லையென்றால் கிடைக்காது சோறு!