2003-ல் உன்னை சரணடைந்தேன் படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர், சமுத்திரக்கனி. 2009-ல் இவர் இயக்கிய நாடோடிகள் பெரிய வெற்றி பெற்றது. 2008-ல் சுப்ரமணியபுரம் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த பிறகு நடிப்பில் மும்முரமாகி விட்டார். சமீபத்தில் இவர் இயக்கிய நாடோடிகள் 2 படம் ஜனவரி 31 அன்று வெளியாகவுள்ளது.
இந்நிலையில் மாஸ்டர் படத்துக்குப் பிறகு சமுத்திரக்கனி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. கதையை விஜய்யிடம் ஏற்கெனவே கூறிவிட்டதாகவும், சிறிது காலம் காத்திருக்கச் சொன்னதாகவும் சமுத்திரக்கனி ஒரு பேட்டியில் சொன்னார். இதையடுத்து விஜய் - சமுத்திரக்கனி கூட்டணி உருவாக வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் சமுத்திரக்கனி மட்டுமல்லாமல் மகிழ் திருமேனி, வெற்றிமாறன், பேரரசு, அருண் ராஜா காமராஜ், மோஜன் ராஜா ஆகிய இயக்குநர்களிடமும் விஜய் கதை கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு தன்னுடைய அடுத்தப் படத்தை விஜய் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.