கிராமி விருது விழாவில் பிரபல பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா அணிந்த கவர்ச்சிகரமான உடை விமரிசனத்துக்கு ஆளாகியுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸில் நேற்று நடைபெற்ற கிராமி விருது விழாவில் தனது கணவரின் குடும்பத்துடன் கலந்துகொண்டார் நடிகை ப்ரியங்கா சோப்ரா. அவருடைய கணவர் நிக் ஜோனாஸ் மற்றும் சகோதரர்கள், மேடையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இரு பாடல்களைப் பாடினார்கள்.
என்பிஏ கூடைப்பந்து ஜாம்பவான் கோப் பிரையண்ட், அவரது மகள் உள்ளிட்டோா் சமீபத்தில் ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்தார்கள். அவரது நினைவாக கோப் பிரையண்ட்டின் எண்ணான 24-ஐ தன்னுடைய நகத்தில் தீட்டியிருந்தார் ப்ரியங்கா. கிராமி விருதுகள் விழாவிலும் பிரையண்ட்டுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
ப்ரியங்காவின் உடையை டிசைனர் வெண்டெல் ராட்ரிக்ஸ் தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் விமரிசனம் செய்திருந்தார். ரசிகர்கள் பலரும் கிராமி விருது விழாவில் ப்ரியங்கா அணிந்த உடையை விமரிசனம் செய்துள்ளார்கள். விருது விழாவுக்குப் பொருத்தமில்லாத உடையை அணிந்துள்ளார் என்பதே பலருடைய குற்றச்சாட்டாக உள்ளது. இந்நிலையில் நடிகை சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி, ப்ரியங்காவுக்கு ஆதரவாகப் பதிவு எழுதியுள்ளார். ப்ரியங்காவின் தன்னம்பிக்கை ஒவ்வொரு பெண்ணுக்குமான ஊக்கம் எனப் பாராட்டியுள்ளார்.