கரோனா ஊரடங்கால் பல பாதிப்புகளைத் தமிழ்த் திரையுலகம் எதிர்கொண்டுள்ள நிலையில் கோப்ரா படத்தின் இயக்குநர் தனது சம்பளத்தைக் குறைத்துக்கொண்டுள்ளார்.
கரோனா அச்சுறுத்தலால் இந்தியத் திரையுலகமே பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளது. தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக நடைபெறவில்லை.
கரோனா பாதிப்பால் திரையுலகம் முடங்கியுள்ள நிலையில் தயாரிப்பாளர்களின் வலியைப் பகிர்ந்துகொள்ள பிரபலங்கள் சிலர் முன்வந்துள்ளார்கள்.
ஒவ்வொரு படத்திலும் ரூ. 1 கோடி அளவில், தான் நடித்து வரும் மூன்று படங்களில் தனக்கு வழங்கப்படும் சம்பளத்திலிருந்து ஒரு பகுதியைக் குறைத்துக்கொண்டுள்ளார் நடிகர் விஜய் ஆண்டனி. இதற்குப் பாராட்டு தெரிவித்த இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண், தானும் இதைப் பின்பற்றப்போவதாக அறிவித்துள்ளார். பிரபல இயக்குநர், ஹரியும் தன்னுடைய சம்பளத்தைக் குறைத்துக்கொண்டுள்ளார். கரோனாவால் திரையுலகம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. நம் தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால் தான் நம் தொழில் மறுபடியும் நல்ல நிலைமைக்குத் திரும்பும். இந்தச் சூழலை மனத்தில் கொண்டு நான் அடுத்ததாக இயக்கும் அருவா படத்தில் என்னுடைய சம்பளத்தில் 25% குறைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளேன் என்று ஹரி கூறினார்.
சினிமா மீண்டும் எழுந்து நிற்க முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞா்கள் தங்களது சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என இயக்குநா் மணிரத்னம் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களுக்கு அடுத்ததாக விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தை இயக்கி வருகிறார் அஜய் ஞானமுத்து. இசை - ஏ.ஆர். ரஹ்மான். கோப்ரா படத்தில் ஏழு வேடங்களில் விக்ரம் நடிப்பதாக அறியப்படுகிறது. இப்படத்தின் கேஜிஎஃப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான் போன்றோர் நடிக்கிறார்கள். மே மாதம் கோப்ரா படம் வெளிவருவதாக இருந்த நிலையில் அதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப்படத்தைத் தயாரிக்கும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ, 90 நாள்கள் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இன்னும் 25% படப்பிடிப்பு மீதமுள்ளது என்று சமீபத்தில் தகவல் வெளியிட்டது.
கரோனா ஊரடங்கால் பல பாதிப்புகளைத் தமிழ்த் திரையுலகம் எதிர்கொண்டுள்ள நிலையில் கோப்ரா படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து தனது சம்பளத்தைக் குறைத்துக்கொண்டுள்ளார். இதுபோன்ற கடினமான சூழலில், தனது சம்பளத்திலிருந்து 40% குறைத்துக்கொள்வதாக அவர் அறிவித்துள்ளார்.